வரலாற்று சாதனை படைத்த சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலுக்கு விருது! மத்திய அரசு கவுரவிப்பு
சென்னை: நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கி உலக சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில் இதன் திட்ட இயக்குநரான வீரமுத்துவேலுக்கு விஞ்ஞான் பிரதிபா விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது.
நிலவின் தென் துருவத்தில் உள்ள பள்ளத்தாக்குகளில் பல பில்லியன் ஆண்டுகளாக சூரிய ஒளியே படாமல் இருக்கிறது. இந்நிலையில் இங்கு நீர் இருப்பதற்கான சாத்தியங்களை சந்திரயான்-1 விண்கலம் கண்டுபிடித்து சொன்னது. 312 நாட்களாக நிலவை 3,400 சுற்றுகளை சுற்றிய பின்னர்தான் இதை சந்திரயான் 1 உறுதி செய்தது. அதன் பின்னர் நிலவை யார் ஆக்கிரமிக்கப்போகிறார்கள் என்கிற போட்டி தொடங்கியது. இதனையடுத்து நிலவில் ரோவரை இறக்கி அதில் அதன் மூலம் ஆய்வு செய்ய கடந்த 2019ம் ஆண்டு சந்திரயான்-2 திட்டத்தை செயல்படுத்தியது இஸ்ரோ.

ஆனால் இந்த திட்டத்தில் ஏற்பட்ட சிறிய தொழில்நுட்ப தவறால் நிலவில் தரையிறங்க இருந்த ரோவர் கட்டுப்பாட்டை இழந்து நிலவில் வேகமாக மோதி உடைந்தது. இருப்பினும் இதனை கொண்டு சென்ற ஆர்பிட்டர் தற்போது வரை செயல்பட்டு வருகிறது. எனவே மீண்டும் மற்றொரு ரோவரை அனுப்புவது என்று முடிவெடுத்து சந்திரயான்-3 திட்டம் செயல்படுத்தப்பட்டது.
அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் கடந்த 23ம் தேதியன்று மாலை 6.04 மணிக்கு திட்டமிட்டபடி நிலவில் மெல்ல தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது. விண்வெளி துறையின் முன்னோடியான ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம் கூட நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்க முடியாமல் நிலவில் மோதி செயலிழந்த நிலையில், இந்தியாவின் சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கி இருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இந்த வெற்றி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வெற்றி சாமானிய மக்களையும் விண்வெளி அறிவியல் மீது ஆர்வத்தை தூண்ட செய்திருக்கிறது. இந்நிலையில், சந்திரயான் 3 திட்ட இயக்குநரான வீரமுத்துவேலுக்கு விஞ்ஞான் பிரதிபா விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் மற்றும் விக்யான் பாரத் ஏற்பாடு செய்த பத்தாவது அறிவியல் கண்காட்சி போபாலில் நடைபெற்றது. இதில் வீரமுத்துவேலுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
வீரமுத்துவேலை தொடர்ந்து வந்தே பாரத் ரயில் உருவாக்கத்தில் ஈடுபட்ட பெரம்பூர் ஐ.சி.எப் தொழிற்சாலையின் முன்னாள் இயக்குநர் மணி ஆகியோருக்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் உயரிய விருதான விஞ்ஞான பிரதிபா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications