ஹே சந்திரயான் நிலவில் நீ மடியேறு.. நாளை நாங்கள் குடியேற.. இப்போதே ரிசர்வ் செய்த வைரமுத்து
சென்னை: சந்திரயான் வெற்றியுறின் அது இந்திய வெற்றியல்ல மானுட வெற்றி என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். லூனா நொறுங்கியது ரஷியாவின் தோல்வியல்ல, விஞ்ஞானத் தோல்வி என கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
நிலவின் தென் துருவத்தில், இதுவரை யாரும் ஆய்வு செய்யாத இடத்தில், தடம் பதிக்க இந்தியா முயற்சி மேற்கொண்டு, கடந்த மாதம் 14ஆம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியது. பூமிக்கும், நிலவுக்கும் இடையேயுள்ள 3 லட்சத்து 84 ஆயிரம் கி.மீ. தூரத்தை 40 நாட்கள் பயணித்து கடக்கும் திட்டத்துடன் புறப்பட்ட சந்திரயான்-3, முதலில் புவி வட்டப்பாதையில் பல்வேறு நிலைகளில் சுற்றிவந்து, பிறகு நிலவு நோக்கி பயணித்து, அதன் வட்டப்பாதைக்கு மாற்றப்பட்டது.

வெற்றிகரமான பயணத்தின் அடுத்த படியாக 'சந்திரயான்-3' விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற 'விக்ரம் லேண்டர்' நாளை நிலவில் தரையிறங்க உள்ள நிலையில் இதை நேரலையாக ஒளிபரப்ப உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. சந்திரயான் நிலவில் இறங்கும் நேரத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர் இந்திய மக்கள். எங்கும் எதிலும் சந்திரயான் பற்றிய பேச்சுத்தான். நிலவில் தரையிறங்கப்போகும் இடத்தை கூட புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது

நிலவிற்கு சென்றுள்ள சந்திரயான் குறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். "நேரம் நெருங்க நெருங்க மூளைக்குள் வட்டமடிக்கிறது சந்திரயான். நிலவில் அது மெல்லிறக்கம் கொள்ளும்வரை நல்லுறக்கம் கொள்ளோம். லூனா நொறுங்கியது ரஷ்யாவின் தோல்வியல்ல; விஞ்ஞானத் தோல்வி. சந்திரயான் வெற்றியுறின் அது இந்திய வெற்றியல்ல; மானுட வெற்றி. ஹே சந்திரயான்! நிலவில் நீ மடியேறு நாளை நாங்கள் குடியேற" என்று தெரிவித்துள்ளார். சந்திரனில் குடியேற சந்திராயன் மூலம் இப்போதே ரிசர்வ் செய்து விட்டார் வைரமுத்து.












Click it and Unblock the Notifications