டிடிவி தினகரன் நினைக்கும் மாற்றம் நிச்சயம் வரும்.. அண்ணாமலை கொடுத்த ட்விஸ்ட்!
சென்னை: அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், வரும் நாட்களில் நிச்சயம் டிடிவி தினகரன் நினைக்கும் மாற்றங்கள் வரும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். டிடிவி தினகரன் இதயம் நல்ல இதயம் என்று கூறிய அண்ணாமலை, 2 நாட்களுக்கு முன்பாகவே மருத்துவமனை செல்வது தொடர்பாக தகவல் கூறியதாக தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, அமமுக, ஓபிஎஸ் உள்ளிட்டோர் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தனர். தற்போது அதிமுக - பாஜக கூட்டணி அமைந்துள்ள நிலையில், அமமுக மற்றும் ஓபிஎஸ் அணியை பாஜக கைவிட்டதா என்ற கேள்வி அக்கட்சி ஆதரவாளர்கள் இடையே எழுந்துள்ளது. மத்திய அமைச்சர் அமித் ஷாவும், அதிமுக உட்கட்சி விவகாரங்களில் நாங்கள் தலையிடுவதில்லை என்று உறுதியாக கூறி சென்றார்.

அதேபோல் சென்னை வந்த மத்திய அமைச்சர் அமித் ஷாவை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சந்திக்கவில்லை. அதற்கு பதிலாக அப்போலோ மருத்துவமனையில் சோதனைக்காக சென்றிருந்தார். அதேபோல் ஓபிஎஸ்-க்கும் அமித் ஷாவை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை. இதனால் இருவரையும் பாஜக கைவிட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் சென்னையில் தனியார் தொலைக்காட்சியின் 2வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் ஒரே மேடையில் அமர்ந்திருந்தனர். அப்போது அண்ணாமலை பேசுகையில், அமமுக பொதுச்செயலாளர் நேற்று மருத்துவமனைக்கு செல்வதாக 2 நாட்களுக்கு முன்பாகவே கூறிவிட்டார்.
டிடிவி தினகரன் அண்ணாவின் இதயம் நல்ல இதயம் என்று அனைவருக்கும் தெரியும். அதனை மருத்துவர்களே சான்றிதழ் கொடுத்து உறுதி செய்துள்ளனர். நீங்கள் அற்புதமான மனிதர் என்று பழகி பார்த்த அனைவருக்கும் தெரியும். நிச்சயம் நீங்கள் நினைக்கும் மாற்றங்கள் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்த போது, நாங்கள் மோடியின் அணியில் இருக்கிறோம் என்று ஒரே போடாக போட்டுள்ளார். இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக - பாஜக ஆகியோருடன் அமமுக இணையுமா என்று கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஓபிஎஸ் தனித்துவிடப்படவில்லை என்றும் ட்விஸ்ட் வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications