பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. பிஎஸ்பிபி ஆசிரியர் ராஜகோபால் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
சென்னை: பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் ராஜகோபால் மீதான பாலியல் வழக்கில் அசோக் நகர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். 7 பேர் அளித்த புகாரின் அடிப்படையில் வாக்குமூலம் பெறப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை கேகே நகரில் பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக உள்ளவர் ராஜகோபால், இவர் அங்குப் படிக்கும் மாணவிகளுக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாகக் கடந்த 2016ஆம் ஆண்டு அப்பள்ளியில் படித்த மாணவி ஒருவர் புகார் அளித்திருந்தார். அதைத்தொடர்ந்து அப்பள்ளியில் படித்த பல்வேறு முன்னாள் மாணவிகளும் ராஜகோபல் பாலியல் தொல்லை அளித்ததாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தனர்.
இதையடுத்து கடந்த மே 24ஆம் தேதி ராஜகோபால் கைது செய்யப்பட்டார். முதலில் தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார். பின்னர், இது ஆபாச எஸ்எம்எஸ்கள் உள்ளிட்ட ஆதாரங்களைக் காட்டிய பின்னரே ராஜகோபால் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
போக்சோ பிரிவு உட்பட 6 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கடந்த மே 24ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். மேலும், பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தொடர்ந்து புகார்கள் வந்ததால் சென்னை மாநகர காவல் ஆணையரின் உத்தரவுப்படி கடந்த ஜூன் மாதம் ஆசிரியர் ராஜகோபாலன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
இந்த வழக்கில் விசாரணை துரிதமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் ராஜகோபால் மீதான பாலியல் வழக்கில் அசோக் நகர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 7 பேர் அளித்த புகாரின் அடிப்படையில் வாக்குமூலம் பெறப்பட்டுக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications