ஊழல் அதிகமாயிடுச்சு.. அரசுபள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபாருங்க.. விஜிலென்சுக்கு உத்தரவு
சென்னை: கல்வித்துறையில் ஊழல் அதிகரித்துள்ளதாக கூறி, அரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு ஆதார் அடிப்படையிலான பயோ மெட்ரிக் வருகை பதிவேடு முறை அமல்படுத்தப்படுவதாக கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நாகர்கோவிலைச் சேர்ந்த அண்ணல் அரசு பள்ளி ஆசிரியர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
முதலில் 'மோடி' படத்தை பாருங்க.. அப்புறம் முடிவெடுங்க.. எலெக்சன் கமிஷனுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
2 முறை தள்ளுபடி
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்எம் சுப்பிரமணியம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு பள்ளி ஆசிரியர்களின் வருகையை உறுதி செய்யவே பயோமெட்ரிக் பதிவு கொண்டுவரப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும் இரண்டு முறை இந்த வழக்கு நீதிமன்றத்தால் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.
எப்படி ஒழுக்கம்
அதற்கு நீதிபதி பிறப்பித்த உத்தரவில், அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ள ஆசிரியர், எப்படி மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுக்கொடுப்பார் என எதிர்பார்க்க முடியும் என்று கேள்வி எழுப்பி, ஆசிரியரின் மனுவை தள்ளுபடி செய்தார்.
பெற்றோர்கள் புகார்
மேலும் இது போன்ற உத்தரவுகளை பிறப்பிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும், அரசு பள்ளி ஆசிரியர்கள் சரியாக பள்ளிக்கு வருவதில்லை என்று பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வருவதால் தான், பயோமெட்ரிக் வருகை பதிவு முறையை அமல்படுத்தும் நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது என்றும் நீதிபதி தெரிவித்தார்.
ஆசிரியர்களின் சொத்துக்கள்
மேலும் கல்வித்துறையில் ஊழல் அதிகரித்துவிட்டதாக கருத்து தெரிவித்த நீதிபதி, அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை சரி பார்க்க வேண்டும் என்றும், தவறுகள் கண்டறிப்பட்டால் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
நீதிபதி அதிருப்தி
தன்னுடைய அடிப்படை உரிமை பாதிப்பதாக மனுதாரர் கருதினால் பணியில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்றும் அரசு பணியில் தொடர நினைத்தால், அரசின் கொள்கைகளையும் பணி விதிகளையும் பின்பற்றித்தான் ஆக வேண்டும் என்றும் நீதிபதி சுப்பிரமணியம் தெரிவித்தார்.