முழு கொள்ளளவை வேகமாக நெருங்கும் செம்பரம்பாக்கம் ஏரி.. நீர் மட்டம் 24 அடிக்கு 20 அடியாக உயர்வு
சென்னை: கனமழை எதிரொலியாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் 20 அடியை தாண்டியது. இதனால் எந்த நேரத்திலும் நிரம்பும் நிலையில் ஏரி உள்ளது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை எச்சரிக்கையை சென்னை வானிலை மையம் கொடுத்துள்ளது.

இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் மட்டம் 20 அடியை தாண்டியது. முழு கொள்ளளவான 24 அடியை வேகமாக நெருங்குகிறது ஏரி. தற்போது நீர்மட்டம் 20 அடியை தாண்டியதால் பொதுப் பணித் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
பொதுமக்கள் யாரும் ஏரிக்கு செல்லாத வகையில் போலீஸார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். எந்த நேரத்திலும் நிரம்பும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது.
ஏரியின் நீர் மட்டம் 21 அடியை எட்டியதும் தண்ணீர் திறக்கப்படும் என தெரிகிறது. இந்த பருவமழைக்குள் நிச்சயம் அந்த ஏரி நிரம்பி வரும் கோடையில் இதமான கோடையாக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
மக்களோ கடந்த 2015 இல் சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரி உடைந்ததால் நகர் முழுவதும் பெரு வெள்ளம் ஏற்பட்டது. அது போல் இந்த முறை நடந்துவிடுமோ என்ற அச்சத்தில் உறைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications