சேலம் சென்றாய பெருமாள் கோவிலில் நில ஆக்கிரமிப்பு.. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை: சேலத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில் நில ஆக்கிரமிப்புக்கு துணை புரிந்த இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் தமிழகம் முழுவதும் 38,600 கோவில்கள் உள்ளது. இதில் 331 கோவில்களில் இருந்து வருடத்திற்கு 10 லட்சத்திற்கும் அதிகமான வருமானமும், 34,099 கோவில்களில் 10 ரூபாய்க்கு குறைவான வருமானம் கிடைக்கிறது.

கோவில் நிலங்களில் இருந்து கிடைக்கும் வருமானத்தை திருவிழாக்கள், பராமரிப்பு, குளம் தூர்வாருதல் போன்ற பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என விதிகள் உள்ளது. அதை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க பிரசித்தி பெற்ற அருள்மிகு சென்றாய பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உதவியுடன் பல நபர்கள் அபகரிப்பு செய்துள்ளனர்

கோவில் நிலத்தை மீட்டு, அபகரிப்புக்கு உடந்தையாக இருந்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என 2014 மற்றும் 2018 ம் ஆண்டில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.
அதனால், கோவில் நிலத்தை மீட்க இந்த சமய அறநிலையத்துறை சிறப்பு குழுவை அமைத்து கோவில் சொத்துக்களை ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும்.ஆக்கிரமிப்பால் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் ஏற்பட்ட வருவாய் இழப்புகளை அதிகாரிகளுடம் இருந்து வசூலிக்கவும், நில ஆக்கிரமிப்புக்கு துணை புரிந்த அதிகாரிகளான சேலம் மாவட்டம் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள், எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் 4 வாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications