அப்பானு கூப்பிட்ட மகளையே.. பாலியல் தொழிலில் தள்ளிய முருகன்! அதுவும் கிழடர்களுக்கு.. அதிர்ந்த செங்கை!
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு பத்துக்கு மேற்பட்ட வயதான நபர்களுடன் விடுதியில் தங்க வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய மாணவியின் தாயின் மூன்றாவது கணவரை போலீசார் கைது செய்திருக்கின்றனர். கோடை விடுமுறையை பயன்படுத்தி மாணவியை பாலியல் தொழிலில் தள்ளிய நிலையில், ஆசிரியரிடம் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து மாணவி விவரித்த நிலையில் போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை பாய்ந்திருக்கிறது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக 18 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பாலியல் தொழிலில் தள்ளப்படுவதும், வீட்டில் இருக்கும் நபர்களாலேயே பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு உள்ளாக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது.
இதையடுத்து பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு மாணவிகள் யாரேனும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருந்தால் புகார் அளிக்கலாம் என விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது அரசு. அப்படி விழிப்புணர்வு பெற்ற மாணவி ஒருவர் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து விவரித்ததன் அடிப்படையில் மிகப் பெரிய அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே முதுகரை பகுதியில் வசிக்கும் பள்ளி மாணவி ஒருவர், கோடை விடுமுறையின் போது தன்னுடைய பெற்றோர்களால் பல்வேறு ஆண்களிடம் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதாக, பள்ளி ஆசிரியரிடம் மனமுவந்து தெரிவித்தார். அந்தச் சிறுமி கூறிய விவரங்களை கேட்ட ஆசிரியர் அதிர்ச்சி அடைந்து, உடனடியாக 'சைல்டு ஹெல்ப் லைன்' மற்றும் மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார்.
தகவலின் பேரில், முதுகரை பகுதியைச் சேர்ந்த செல்வம் மற்றும் முருகன் என்ற இருவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், சிறுமியின் தாய் பல ஆண்களுடன் தொடர்பில் இருந்ததும், தற்போது மூன்றாவது கணவர் முருகனுடன் வசித்து வந்ததும் தெரியவந்தது. தந்தை ஸ்தானத்தில் இருந்த முருகன், அந்தச் சிறுமியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதோடு மட்டுமல்லாமல், 40 முதல் 60 வயதுடைய 13 பேரிடம் பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்தியும் உள்ளனர் என்பது போலீஸ் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மேலும், மதுராந்தகத்தில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து, அந்தச் சிறுமியை அங்கே அனுப்பி வாடிக்கையாளர்களிடம் ஒப்படைத்ததும், இதற்காக திட்டமிட்டு கோடை விடுமுறை காலத்தை பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது. இந்த கொடுமைகளிலிருந்து தப்பிக்க, சிறுமி பள்ளி விடுதியில் தங்கி வந்தார். ஆனால், விடுமுறையில் வீட்டுக்கு வா என அன்பாக அழைத்துக் கொண்டு சென்ற பெற்றோர், மீண்டும் அவளை பாலியல் தொழிலுக்கு தள்ளியுள்ளனர்.
உடல் மற்றும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமி, இனி பொறுக்க முடியாது என எண்ணி, தன் நம்பிக்கையான ஆசிரியரிடம் நடந்த கொடுமையை வெளிப்படுத்தியுள்ளார். ஆசிரியரின் விழிப்புணர்வான நடவடிக்கையால், இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தற்போது, சிறுமி அரசு பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். செல்வம், முருகன் மற்றும் சிறுமியின் தாயார் மீது போக்சோ (POCSO) சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications