"பைத்தியக்காரத்தனம்".. யாரும் யாரையும் காணாமலடிக்க முடியாது.. ஸ்டாலினை சீண்டிய விஜய்யை சாடிய முத்தரசன்!
திருவாரூர்: ''நாட்டில் சில விஷயங்கள் அப்படி இப்படியுமா நடக்கும். யாரும் யாரையும் காணாமலடித்துவிட முடியாது. பைத்தியக்குளித்தன்மமாக (பைத்தியக்காரத்தனம்) காணோம் என்கிறான். எதை காணோம். காணாமல் அடித்துவிட முடியுமா?, யாரையும் காணாமலடித்துவிட முடியாது'' என்று திமுக முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்ல திருமண விழாவில் தவெக அரசுக்கு ஆதரவாக உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் பேசியுள்ளார். இதன்மூலம் ஸ்டாலினுக்கு ஆதரவாக விஜய்யை அவர் விமர்சனம் செய்துள்ளார்.
திமுக விவசாய தொழிலாளர் அணி தலைவரும், முன்னாள் அமைச்சருமான மதிவாணன் இல்ல திருமண விழா திருவாரூரில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான முக ஸ்டாலின் நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

இந்த விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளரும், மூத்த தலைவருமான முத்தரசன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
''தலைவரை (ஸ்டாலின்) போய் நான் வீட்டில் சந்தித்துவிட்டு வந்தேன். தலைவரை வீட்டில் போய் பார்ப்பது ஒன்றும் புதிதும் அல்ல. அதிசயமும் அல்ல. எல்லோரும் போய் பார்த்தோம். நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர் கவுதமன் (திமுக) என்னை வழக்கம்போல் அப்பா என்று தான் கூறுவார். திடீரென்று அண்ணன் என்று அழைத்தார். திடீரென்று ஏன் அண்ணன் என்று அழைக்கிறீர்கள்? என்று கேட்டேன்.
நேற்று வரை அப்பா என்று அழைத்தேன். இன்று முதல் அண்ணன் என்று மாறிவீட்டிர்களே என்று கேட்டார். என்ன மாறிட்டேன். ஒன்னும் புரியவில்லை என்று கேட்டேன். இல்லை நீங்கள் மாறிவிட்டீர்கள் என்று சொன்னார். அப்போது இல்லை.. அதுபற்றி நானும் தலைவரும் (ஸ்டாலின்) பேசி கொள்கிறோம் என்று கூறினேன். நீ வழக்கம்போல் அப்பா என்று தானே கூற வேண்டும் என்று சொன்னேன். சரி என்றார்.
நாட்டில் சில விஷயங்கள் அப்படி இப்படியுமா நடக்கும். யாரும் யாரையும் காணாமலடித்துவிட முடியாது. பைத்தியக்குளித்தன்மமாக (பைத்தியக்காரத்தனம்) காணோம் என்கிறான். எதை காணோம். காணாமல் அடித்துவிட முடியுமா?, யாரையும் காணாமலடித்துவிட முடியாது. நான் ரொம்ப நாளாக தலைவரை பார்க்கவில்லை. எனக்கு கோபம் எல்லாம் கிடையாது. அவரை பார்ப்பதில் எனக்கு எந்த சங்கடமும் கிடையாது.
அண்ணன் - தம்பியாக தான் பழகி வருகிறோம். நேரு (முன்னாள் அமைச்சர் கேஎன் நேரு) அண்ணன் எங்களை கிண்டல் பண்ணுவாரு. என்ன மாநில தலைவரை ஊர்க்காரருனு பேசிக்கிட்டு இருக்கிற என்று கிண்டல் செய்வார். நாங்கள் ஒரே ஊர்க்காரர்கள். ஒரே தொகுதியை சேர்ந்தவர்கள். எந்த நேரத்திலும் எப்படி வேண்டுமானாலும் பார்ப்பேன். பேசுவேன். அதுவெல்லாம் ஒன்றும் பெரிய பிரச்சனை கிடையாது. அப்படித்தான் இன்றும் பேசிவிட்டு வந்தோம். தேர்தலுக்கு முன் எப்படி இருந்தாரோ அதே கலகலப்போடு தான் ஸ்டாலின் இப்போதும் இருக்கிறார்'' என்றார்.
இதன்மூலம் முத்தரசன், தவெக தலைவரும், முதல்வருமான விஜய்யை சீண்டி உள்ளார். அதாவது சில நாட்களுக்கு முன்பு சட்டசபையில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். அதன்பிறகு சட்டசபையில் விஜய் குட்டிக்கதை கூறினார்.
''ஒரு ஊரில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது என்பதால் பெரியர் ஒருவர் கண்கள் மீது கையை வைத்து மறைத்தபடி சுற்றும் முற்றும் பார்த்து தேடிக்கொண்டிருந்தார். அப்போது உடன் இருந்த சிறுவன் என்ன தேடுகிறீர்கள் என கேட்டான். அதற்கு ஒன்றுமில்லை தம்பி, உங்கள் அப்பா இங்கே தான் இருப்பார் என சொன்னார்கள். என தேடிக்கொண்டு இருக்கிறேன். எங்க உங்க அப்பாவை காணோம். அவரை தான் தேடிக்கொண்டு இருக்கிறேன். ஐந்து நிமிடங்கள் பேசியதற்கே கொளத்தூர் இந்த ஆட்டம் கண்டுள்ளது. பேசு பேசு என்றால் நான் வேறு என்ன செய்வது. " என்றார்.
இதன்மூலம், சட்டசபை தேர்தலில் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் தவெக வேட்பாளர் விஎஸ் பாபுவிடம் தோல்வியடைந்ததை கிண்டலடிக்கும் வகையில் பேசியிருந்தார். இதற்கு தான் தற்போது இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் திமுக முன்னாள் அமைச்சர் இல்ல திருமண விழாவில் பங்கேற்று குட்டிக்கதை கூறி விஜய்யை சீண்டி உள்ளார்.












Click it and Unblock the Notifications