ரன்வேயில் ஓடத் தொடங்கிய போது அதிர்ச்சி.. சென்னை - அபுதாபி விமானம் திடீர் ரத்து.. அலறிய பயணிகள்!
சென்னை: சென்னையில் இருந்து அபுதாபி செல்லும் விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. விமானம் பறக்கத் தொடங்குவதற்கு முன் இயந்திரக் கோளாறு கண்டறியப்பட்டதால் 170க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பியுள்ளனர்.
சென்னையில் இருந்து அபுதாபி கிளம்ப இருந்த ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. அபுதாபி செல்லும் ஏர் அரேபியா விமானத்தில் 170க்கும் மேற்பட்ட பயணிகள் அமர்ந்திருந்தனர். விமானம், பறக்கத் தயாராக ஓடுபாதையில் பயணிக்கத் தொடங்கியது.

அப்போது, விமானத்தின் இயந்திரத்தில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, உடனடியாக, விமானம் ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது. உடனடியாக, பயணிகள் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டனர். தொடர்ந்து, விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறை சரிசெய்யும் பணியில் விமான ஊழியர்கள் ஈடுபடத் தொடங்கினர்.
விமான இயந்திரக் கோளாறை சரி செய்யும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதால்,
சென்னையில் இருந்து அபுதாபி செல்லவிருந்த ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் விமானம் ரத்து செய்யப்பட்டது. விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டதும், விமான நிறுவன அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, பயணிகள் சென்னையில் உள்ள பல்வேறு உயர்தர ஓட்டல்களில் தங்கவைக்கப்படுவார்கள் என உறுதி அளிக்கப்பட்டது. விமானம் ரத்து செய்யப்பட்ட நிலையில் 164 பயணிகள் ஓட்டல்களில் தங்கவைக்கப் படுகின்றனர். இயந்திரக் கோளாறு சரி செய்யப்பட்டு, நாளை அதிகாலையில் சென்னையில் இருப்து அபுதாபி விமானம் கிளம்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் பறக்கத் தொடங்குவதற்கு முன் இயந்திரக் கோளாறு கண்டறியப்பட்டதன் காரணமாக, உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டதால், 170க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. இந்த நிகழ்வு, சென்னை விமான நிலைய வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications