326 பேருடன் சென்னை வந்த விமானம்.. பாய்ந்த பச்சை கலர் லேசர் ஒளி.. பதறிப்போன விமானி! பரபரத்த ஏர்போர்ட்
சென்னை: சென்னையில் 326 பயணிகளுடன், தரையிறங்க வந்த துபாய்- சென்னை விமானத்தின் மீது திடீரென லேசர் ஒளி பாய்ந்ததால் பரபரப்பும் , பதற்றமும், அதிர்ச்சியும் ஏற்பட்டுவிட்டது.. எனினும், விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு, விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார். 325 பயணிகளும் பத்திரமாக தரையிறங்கினார்கள்.. இதுகுறித்த விசாரணையும் மும்முரமாக நடத்தப்பட்டு வருகிறது.. என்ன நடந்தது சென்னை விமான நிலையத்தில்?
துபாயிலிருந்து 326 பயணிகளுடன் சென்னைக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம், நேற்றிரவு சென்னை ஏர்போர்ட்டை நோக்கி வந்தது.. சிறிது நேரத்தில் ஏர்போர்ட்டில் தரையிறங்க வேண்டும் என்பதால், பறக்கும் உயரத்தை மெல்ல மெல்ல குறைத்தது.. இதனால் விமானம் தாழ்வாக பறந்தது..

சுதாரித்து செயல்பட்ட விமானி
அப்போது பரங்கிமலை பகுதியிலிருந்து பச்சை நிறத்தில் சக்தி வாய்ந்த லேசர் லைட் ஒளி, விமானத்தின் மீது வேகமாக பாய்ந்தது.. இதை விமானி எதிர்பார்க்கவேயில்லை.. திடீரென ஒளி பாய்ந்து வந்ததால் நிலை குலைந்து போனார்.. எனினும், சில நொடியிலேயே சுதாரித்துக் கொண்டு, தாழ்வாக பறந்த விமானத்தை, சல்லென உயரத்தில் பறக்க செய்தார்.
அத்துடன் கன்ட்ரோல் ரூமை தொடர்பு கொண்டு, லேசர் லைட் ஒளி, விமானத்தின் மீது பீச்சி அடிக்கப்படுவதால், தரையிறங்க முடியவில்லை என்று புகார் செய்தார்.. உடனே Bureau of Civil Aviation Security என்று சொல்லக்கூடிய விமான பாதுகாப்பு பிரிவினருக்கும், சென்னை ஏர்போர்ட் போலீசுக்கும் தகவல் தந்தனர்.. பிறகு, அந்த ரேடர் ஒளி எங்கிருந்து வந்தது? என்ற ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அதற்குள் அந்த ஒளி நின்றுவிட்டது...
அதிகாரிகள் தீவிர ஆய்வு
பின்னர் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது. இதற்கு பிறகு வந்த விமானங்களும் எந்த பிரச்சனையுமில்லாமல் தரையிறங்கின. அந்த லேசர் ஒளி ஒருசில நொடிகள் நீடித்த நிலையில், அதற்கு பிறகு வரவில்லை. எனினும், இந்த சம்பவத்தின் பரபரப்பும், அதிர்ச்சியும் விமான நிலையத்தை சூழ்ந்து கொண்டன.
ஏர்போர்ட் கன்ட்ரோல் ரூம் அதிகாரிகளும், போலீசாரும் இது சம்பந்தமான விசாரணையை தொடர்ந்து நடத்தி கொண்டிருக்கிறார்கள். பரங்கிமலை, நந்தம்பாக்கம், கிண்டி போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் தகவல் தரப்பட்டதால், அவர்களும் விசாரணையில் இறங்கியிருக்கிறார்கள்.
மீண்டும் பரபரப்பு
விமானங்கள் மீது லேசர் லைட் அடிப்பது ஒன்றும் புதிதல்ல.. கடந்த 2 வருடங்களுக்கு முன்பும் இப்படி அடிக்கடி நடந்திருக்கின்றன.. இந்திய விமான நிலைய ஆணையம் இதுகுறித்து ஏற்கனவே ட்விட்டரில், எச்சரிக்கை விடுத்ததோடு, இதை போல் விமானம் போக்குவரத்துக்கு இடையூறு செய்வர் குறித்து தகவல் தெரிந்தால், அருகே உள்ள காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்தும்படி வேண்டுகோள் விடுத்திருந்தது.
அந்தவகையில், விமானம் மீது லேசர் அடித்த வட மாநில கட்டிட தொழிலாளர்கள் 3 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.. சும்மா விளையாட்டுக்காக லேசர் அலைட் அடித்தோம் என்று சொல்லி, மன்னிப்பு கேட்டார்கள்.. அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்துவிட்டனர். இப்போது 2 வருடம் கழித்து மறுபடியும் அதே போன்ற சம்பவம் நடந்துள்ளது, சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications