எச்.ராஜா மீது வழக்குப்பதிவு.. ஜவாஹிருல்லா பற்றிய பேச்சால் சென்னை ஏர்போர்ட் போலீசார் அதிரடி ஆக்ஷன்!
சென்னை: தமிழ்நாடு பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் எச்.ராஜா மீது சென்னை விமான நிலைய போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா பற்றி அவதூறாகப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியான 'அமரன்' படம் வெறுப்பின் விதைப்பு என்றும், வரலாற்று திரிப்பு என்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா ஜவாஹிருல்லாவை கடுமையாக விமர்சித்திருந்தார்.

எச்.ராஜா கடந்த நவம்பர் 7 ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போது, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் தேசத்துரோகிகள். இவர்களை போன்றவர்களை அரசு கண்காணிப்பில் வைக்க வேண்டும். அமரன் திரைப்படத்தை எதிர்ப்பதாக கூறி, தேச துரோகத்தை பரப்புவதாக இருந்தால், நம் நாட்டை நேசிப்பவர்கள் இவர்களுக்கு எதிராக இருக்க வேண்டும் என பேசி இருந்தார் எச்.ராஜா.
இதையடுத்து, பாஜக மாநில ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா மீது மனிதநேய மக்கள் கட்சி சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் மீது அவதூறு பரப்பும் வகையில் தேச துரோகி என்று பேசிய எச்.ராஜா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எச்.ராஜா தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களிடையே ஒற்றுமையை குலைக்கும் விதமாக பேசி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் எச்.ராஜா மீது சென்னை விமான நிலைய போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா பற்றி அவதூறாகப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் எச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications