வானம் முழுக்க கருமேகங்கள்.. இரவு போல மாறிய தலைநகர்.. இந்த 18மாவட்டங்களில் கனமழை.. வானிலை மையம் தகவல்
சென்னை: சென்னையின் அடையாறு, பல்லாவரம், கோட்டூர்புரம், முகப்பேர், கொளத்தூர், அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 2 முதல் 3 மணி நேரத்திற்கு இந்த மழை நீடிக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தலைநகர் சென்னையில் கடந்த சில ஆண்டுகளைப் போல இல்லாமல் இந்த ஆண்டு சிறப்பாக மழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னைக்கு நீர் ஆதாரமாகத் திகழும் அனைத்து ஏரிகளும் நிரம்பியுள்ளது.
இந்நிலையில், சென்னை உள்ளிட்ட மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

மாலையிலேயே இருண்ட சென்னை
தலைநகர் சென்னையில் மாலை 4.30 மணிக்கே கருமேகங்கள் சூழ்ந்ததால் இரவு போல் இருண்டது. சேப்பாக்கம், மயிலாப்பூர், ராயப்பேட்டை, சேலையூர், பெருங்களத்தூர், மீனம்பாக்கம், திருவல்லிக்கேணி, அடையாறு, பல்லாவரம், கோட்டூர்புரம் உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

கனமழை
அதேபோல முகப்பேர், கொளத்தூர், அம்பத்தூர், அண்ணாநகர், நெற்குன்றம், மதுரவாயல் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. அதேநேரம் கனமழை காரணமாக நகரின் பல்வேறு இடங்களிலும் சாலைகளில் நீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளில் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் பரவலாக மழை
சென்னை மட்டுமின்றி சேலம், புதுக்கோட்டை ஈரோடு ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த மழை அடுத்த 2 முதல் 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் வட சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் நல்ல மழை பெய்திருந்த நிலையில், இப்போது தென் சென்னை பகுதியில் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக தரமணி 33 மிமி மழைப் பதிவாகியுள்ளது.

வானிலை ஆய்வு மையம்
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், நீலகிரி, கோவை, நாமக்கல், திண்டுக்கல், திருச்சி, விருதுநகர், வேலூர், திருப்பூர், உள்ளிட்ட 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சில பகுதிகளில் மிதமான மழை விட்டுவிட்டுப் பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. வெப்ப சலனம் காரணமாகத் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் இதுபோன்ற மழை பெய்வதாகவும் செப்டம்பர் மாதமும் தொடர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 நாட்களுக்குத் தொடரும்
முன்னதாக இன்று மதியம் வெளியிடப்பட்ட சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தினசரி செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டில் இன்று முதல் 9ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. க��றிப்பாக நீலகிரி, கோவை மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர மேற்கு மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications