காணாமல் போகும் சென்னை பாம்புகள்! லயோலா கல்லூரி ஆய்வில்.. வெளியான ஷாக் தகவல்!
சென்னை: சென்னை போன்ற பெரு நகரங்களில் பாம்புகள் அங்கொன்றும், இங்கொன்றுமாய் சுற்றி அலைகின்றன. ஆனால், இந்த பாம்புகளை அடியோடு அழிக்கும் வேலைகள் நடந்து வருவதாக சென்னை லயோலா கல்லூரி மற்றும் கர்நாடகாவின் கலிங்கா அறக்கட்டளை இணைந்து நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
இந்த ஆய்வின் முடிவுகள் Zoo print இதழில் வெளியாகியிருக்கிறது. ஆய்வில் சென்னை அயனாவரம் மற்றும் பெரம்பூர் பகுதிகளில் நடந்த மூன்று சம்பவங்களை ஆவணப்படுத்தியுள்ளன.

முதல் சம்பவத்தில், வளர்ப்பு பூனை ஒன்று, ஓநாய் பாம்பை அடித்து கொன்றது. இரண்டாவது சம்பவத்தில், இரண்டு பூனைக்குட்டிகள் சேர்ந்து ஒரு சாரைப்பாம்பு குட்டியை அடித்து கொன்று சாப்பிட்டிருக்கிறது. மூன்றாவது சம்பவம் சென்னை பெரம்பூரில் நடந்தது. 3 காகங்கள் மற்றும் 8 மைனாக்கள் சேர்ந்துக்கொண்டு ஒரு மோதிர வளையன் பாம்பை தாக்கி கொன்றது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மூன்று பாம்புகளும் விஷமற்றவை. பூனைகளுக்கோ, பறவைகளுக்கோ இதனால் பெரிய ஆபத்து இல்லை.
இதில் முக்கியமான விஷயம், பூனைகள் போன்ற விலங்குகளுக்கு, நகர்ப்புறத்தில் எதிரிகள் இல்லை என்பதால், அவை குறிப்பிட்ட எண்ணிக்கையை விட அதிக அளவில் பல்கி பெருகுகின்றன. இதனால், அந்த இடங்களில் மற்ற வேறு எந்த சிறிய உயிர்களும் வாழ முடியாமல் போய்விடுகிறது. இதனால் உணவு சங்கிலியில் பெரிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அதாவது, பாம்புகள் இருப்பின், அது வேறு பறவைகளுக்கு இறையாகிறது. ஆனால், பூனைகள் அப்படி இரையாவது கிடையாது. எனவே பூனைகள் எண்ணிக்கை பல்கி பெருகுகின்றன. அது இருக்கும் இடத்தில் வேறு எந்த சிறு உயிர்களும் இருப்பதில்லை.
அதேபோல பாம்புகள் எலிகளையும், சிறு உயிர்களையும் கன்ட்ரோல் செய்கிறது. ஆனால், பூனைகள் இதை செய்வதில்லை. பூனைகள் இயல்பில் சோம்பேறிகள். அதுவும் வீட்டு பூனைகளை சொல்லவே தேவையில்லை. இந்த பூனைகள் எலிகளை சாப்பிடும் என்றாலும், ரொம்ப ரேராகத்தான் அதை செய்யும். மற்றபடி குப்பையில் உள்ள உணவுகள், வீடுகளில் கொடுக்கும் உணவுகளை சாப்பிட்டு காலத்தை தள்ளிவிடும். பாம்புகள், எலிகளின் பொந்துகளுக்குள் சென்று எலியை மொத்தமாக காலி செய்துவிடுகிறது.
எனவே சென்னைக்கு பாம்புகள் முக்கியம். இல்லையெனில் எலிகள் போன்ற சிறிய உயிர்கள் கட்டுக்கடங்காமல் வளர்ந்துவிடும். தமிழ்நாட்டில் 100-120 வகையான பாம்புகள் கண்டறியப்பட்டிருக்கின்றன. இவற்றில் 4-5% பாம்புகள் மட்டுமே விஷம் கொண்டவை. மீதி 95% பாம்புகள் விஷமற்றவை. எனவே பாம்புகளை கண்டு அஞ்சாமல், அதன் வாழ்விடங்களை அழிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
குறிப்பாக பூனை மற்றும் நாய்களை வளர்ப்பவர்கள், அதனை முழுமையாக கண்காணிக்க வேண்டும். இல்லையெனில் சென்னையில் அரிய உயிர்கள் முற்றிலுமாக அழிந்துவிடும் என்று சூழலியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications