பலாத்காரமான சிறுமியின் பெற்றோருக்கு அடி உதை, அண்ணா நகர் போலீஸ் மீது ஹைகோர்ட் தாமாக முன்வந்து வழக்கு
சென்னை: சென்னையில் கட்டுமான தொழிலாளியின் 10 வயது மகள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான நிலையில், சிறுமியின் பெற்றோரை இரவெல்லாம் வைத்து விசாரித்ததுடன், தாக்கியதாக அண்ணா நகர் மகளிர் போலீசார் மீது புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக பத்திரிகைகளில் வெளியான செய்தி அடிப்படையில், நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் முன்பு வக்கீல் ஏ.பி.சூரியபிரகாசம் ஆஜராகி கூறுகையில், கடந்த ஆகஸ்டு மாதம் சென்னையில் கட்டுமான தொழிலாளியின் 10 வயது மகள் அதேபகுதியை சேர்ந்த ஒரு இளைஞரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார். இதனால் அந்த சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமியை அவரது பெற்றோர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் , சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதை கண்டுபிடித்தனர்.

தொடர்ந்து, மருத்துவர்கள் அண்ணாநகர் மகளிர் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு இன்ஸ்பெக்டர் ராஜி தலைமையில் போலீசார் வந்துள்ளனர். அவர்களிடம் விசாரணை என்ற பெயரில் சிறுமியின் பெற்றோரிடம் ஆதார் கார்டு உள்ளிட்ட விவரங்களை கேட்டுள்ளனர். பின்னர் அண்ணா நகர் மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சிறுமியுடன் விசாரணைக்கு ஆஜராகும்படி கூறியிருக்கிறார்கள்.
இதன்படி சிறுமியுடன் சென்ற அவரது பெற்றோரை விசாரணை என்ற பெயரில் இரவெல்லாம் போலீஸ் நிலையத்தில் வைத்துள்ளனர். போக்சோ வழக்கை பதிவு செய்துள்ளார்கள். பின்னர், யார் பலாத்காரம் செய்தார்? குற்றவாளி யார்? என்பது குறித்து சிறுமியை குழப்பும் விதமாக போலீசார் விசாரித்திருக்கிறார்கள்.. பின்னர் உண்மையான குற்றவாளியின் பெயரை சொல்லக்கூடாது என்று மிரட்டியும் இருக்கிறார்கள.
ஒரு ஆண் போலீஸ்காரர், சிறுமியின் தந்தையை எட்டி உதைத்துள்ளார். சிறுமியின் தாயையும் போலீசார் அடித்துள்ளார்கள். இந்த சம்பவம் எல்லாம், குற்றம்சாட்டப்பட்ட இளைஞரின் முன்னிலையிலேயே நடந்துள்ளது. படிப்பறிவு இல்லாத ஏழை பெற்றோரை போலீசார் இவ்வாறு அடித்து மிரட்டி விசாரணை நடத்தியது சட்டவிரோதம் ஆகும். இதுகுறித்து பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட சிறுமியை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும். சிறுமிக்கு உளவியல் ரீதியாக சிகிச்சை அளிக்க வேண்டும். இழப்பீடும் வழங்க வேண்டும். இன்ஸ்பெக்டர் ராஜி உள்ளிட்ட போலீசார் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு கூறி, செய்தி வந்த பத்திரிகையை வக்கீல் சூரியபிரகாசம் தாக்கல் செய்தார்.
இதையடுத்து செய்திதாளை வாங்கி படித்து பார்த்த நீதிபதிகள், அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், இந்த சம்பவம் குறித்து தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தனர். அந்த வழக்கில் சென்னை அண்ணாநகர் துணை போலீஸ் கமிஷனர் சினேக பிரியா, இன்ஸ்பெக்டர் ராஜி ஆகியோரை எதிர்மனுதாரராக நீதிபதிகள் சேர்த்துள்ளனர். இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்க ஒப்புதல் பெறுவதற்காக அந்த வழக்கை பொறுப்பு தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளனர். தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்த பின்னர் வழக்கு முறைப்படி விசாரணை நடைபெறும். குற்றம்சாட்டப்படும் காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் பதில் அளிக்க வேண்டியதிருக்கும். இதனால் இந்த விவகாரம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications