ஞானசேகரனின் போலீஸ் காவல் இன்றுடன் நிறைவு.. 2 மணி நேர குரல் டெஸ்ட் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்?
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனின் போலீஸ் காவல் இன்றுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, அவர் மீண்டும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு மட்டுமே இவ்வழக்கில் தொடர்பு உள்ளது என்று காவல்துறையும் திட்டவட்டமாக தெரிவித்தது.

ஆனால், இந்த வழக்கின் பின்னணியில் வேறுசில முக்கிய பிரமுகர்கள் உள்ளதாகவும், அவர்களை காப்பாற்ற அரசும், காவல் துறையும் முயல்கிறது என்றும் அதிமுக, பாஜக, பாமக உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டின.
தாமாக முன்வந்து விசாரித்த ஹைகோர்ட்
இதனிடையே, இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த சென்னை ஹைகோர்ட்ட வழக்கை விசாரிக்க 3 பெண் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழுவை அறிவித்தது. அதன்படி, அண்ணாநகர் துணை கமிஷனர் சிநேக பிரியா தலைமையிலான 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவினர் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஞானசேகரனின் வீட்டில் சோதனை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினார்கள்.. மேலும், கைது செய்யப்பட்டிருந்த ஞானசேகரனிடமும் விசாரணை நடத்தினர். அதேபோல், அவரிடமிருந்து ஏற்கெனவே பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை சைபர் க்ரைம் போலீஸாரிடம் வழங்கி அதில் சேமித்து வைத்திருந்த வீடியோக்களையும் கைப்பற்றினர்.
நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு
தொடர்ந்து, சைதாப்பேட்டை 9-வது கோர்ட்டில் ஞானசேகரனை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்தனர். இதனையடுத்து, ஞானசேகரனை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
குற்றவாளி ஞானசேகரனை எழும்பூரில் உள்ள சிறைத்துறை அலுவலகத்தில் வைத்து சிறப்புப் புலனாய்வுக் குழு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே, ஞானசேகரனுக்கு 3 மணி நேரம் குரல் பரிசோதனையும் செய்யப்பட்டது.
இன்றுடன் காவல் முடிவு
இந்த நிலையில், 11 நாட்கள் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில், ஞானசேகரன் கடந்த 7ம் தேதி, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, ஞானசேகரனை பிப்ரவரி 21ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி இன்று ஞானசேகரனுக்கு நீதிமன்றகாவல் முடிவடைகிறது. இன்றைய தினம், ஞானசேகரனின் குரல் மாதிரி பரிசோதனை தொடர்பான அறிக்கையை தடய அறிவியல் துறை அதிகாரிகள் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வார்கள் என தெரிகிறது. போலீஸ் காவல் முடிவதையொட்டி, இன்று சைதாப்பேட்டை கோர்ட்டில் ஞானசேகரன் ஆஜர்படுத்தப்பட்டு, மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications