தாம்பரத்தை விடுங்க! சென்னை கடற்கரை டூ எழும்பூர் மின்சார ரயில் சேவை இன்று ரத்து!
சென்னை: சென்னை கடற்கரையிலிருந்து எழும்பூர் வரை இயக்கப்படும் மின்சார ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் எளிதாக சென்று வரும் வகையில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களில் பள்ளி கல்லூரி மாணவர்கள் முதல் வணிகர்கள் வரை அனைத்து தரப்பினரும் பயணிக்கிறார்கள்.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை கடற்கரை - சென்னை எழும்பூர் இடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 45 மணி முதல் இரவு 7 45 மணி வரையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், சென்னை எழும்பூர்- கடற்கரை இடையே மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.

அதே நேரம் இன்று காலை 7 45 மணி முதல் இரவு 7.45 வரையில் சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் அனைத்து மின்சார ரெயில்களும் அதற்கு மாற்றாக சென்னை எழும்பூரில் இருந்து இயக்கப்படும். அதேபோல, செங்கல்பட்டு மற்றும் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில்கள் சென்னை எழும்பூர் வரை இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கெனவே தாம்பரம் பராமரிப்பு பணிகளுக்காக பகல் மற்றும் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதில் எந்த மாற்றமும் இல்லை. சென்னை கடற்கரை- சென்னை எழும்பூர் இடையே இரவு 7.45 மணிக்கு பராமரிப்பு பணி முடிவடைந்த பின்னர் வழக்கம் போல் சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் மின்சார ரெயில் சேவைகள் காலை மற்றும் இரவு நேரங்களில் முன்னதாக வெளியிட்ட அறிவிப்பின்படி ரத்து செய்யப்படுகிறது. நேற்று 55 ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்றும் அதே நிலை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்டு 3-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை மின்சார ரெயில் சேவைகள் சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏற்கனவே அறிவித்தது போலவே பகல் மற்றும் இரவு நேரங்களில் ரத்து செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications