சென்னை பெங்களூரு புல்லட் ரயில்! ₹18,000 கோடி டெண்டர் அறிவிப்பு! இனி 73 நிமிடங்களில் பயணம் உறுதியானது
சென்னை: சென்னை பெங்களூரு புல்லட் ரயில் திட்டத்திற்கு ரூ.18000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது... ஆம், சென்னை மற்றும் பெங்களூரு இடையேயான பயண தொலைவையும், பயண நேரத்தையும் குறைக்கக்கூடிய புல்லட் ரயில் திட்டம் இப்போது அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளது. இந்தியாவின் 3வது அதிவேக புல்லட் ரயில் திட்டமாக அமையப்போகும் இந்த சென்னை - பெங்களூரு வழித்தடத்திற்கான பூர்வாங்க கட்டுமானப் பணிகளுக்கான அதிகாரப்பூர டெண்டரை தேசிய அதிவேக ரயில் கழகம் இப்போது வெளியிட்டுள்ளது. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்...!!
சென்னை - பெங்களூரு வழித்தடத்திற்கான கட்டுமானப் பணிகளுக்கான டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த புதிய டெண்டரின்படி, ஒப்பந்ததாரர்கள் இந்த திட்டத்தின் திருத்தப்பட்ட புதிய வழித்தட வரைபடத்தின் அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை பெங்களூரு புல்லட் ரயில்
ரூ.18000 கோடி மதிப்பிலான இந்த அதிவேக ரயில் சேவை பயன்பாட்டிற்கு வரும்போது, சென்னை மற்றும் பெங்களூரு இடையேயான பயண நேரம் இப்போதைய 7 மணி நேரத்திலிருந்து வெறும் 73 நிமிடங்களாக, அதாவது 1 மணி நேரம் 13 நிமிடங்களாக குறைந்துவிடும் என ரயில்வே அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.
மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் இயங்கக்கூடிய இந்த புல்லட் ரயில் திட்டத்திற்காக, மொத்தம் 306 கிலோமீட்டர் நீள வழித்தடம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் சென்னை சென்ட்ரல், பூந்தமல்லி, அரக்கோணம், ஆந்திர மாநிலம் சித்தூர், கர்நாடக மாநிலம் கோலார், கொடிஹள்ளி, ஒயிட்பீல்டு மற்றும் பெங்களூரு பையப்பனஹள்ளி ஆகிய எட்டு ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
ரூ.18,000 கோடி டெண்டர் அறிவிப்பு
இந்த திட்டத்தில், பரந்தூரில் அமையவுள்ள புதிய சர்வதேச விமான நிலையத்திற்கான இணைப்புக்காக, பரந்தூர் தற்போதைக்கு ஒரு "எதிர்கால நிலையமாக" வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் 2026-27ம் ஆண்டு பட்ஜெட்டிலும் இத்திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இந்த பாதையை உருவாக்குவதற்காக, திட்ட வழித்தடத்தில் அமையவுள்ள 41 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் பணிகளும் ஆரம்பமாகி உள்ளன.. அதனால் எப்படியும் வரும் 2035ம் ஆண்டிற்குள் இந்த திட்டத்தை முழுமையாக நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் முதல் புல்லட் ரயில் நிலையம் சென்னை புறநகர் ரயில் நிலையத்தின் மேற்கு பகுதியில், தரைக்கடியில் அதிநவீன வசதிகளுடன் அமையவுள்ளது. பயணிகள் எளிதாக பயணிக்கும் வகையில், இது சென்னை சென்ட்ரல் மற்றும் மெட்ரோ நிலையங்களுடன் முறையே 100 மீட்டர் மற்றும் 50 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை இணைப்புகள் மூலம் இணைக்கப்பட உள்ளது.
73 நிமிடங்களில் பயணம் உறுதியானது
இங்கிருந்து கிளம்பும் ரயில் பெரம்பூர், கொளத்தூர், ஐசிஎஃப், மாதவரம், பாடி மேம்பாலம், சென்னை பைபாஸ், சென்னை - திருவள்ளூர் நெடுஞ்சாலை, அண்ணனூர் மற்றும் பூந்தமல்லி வழியாக அரக்கோணத்தை சென்றடையும்.
அதேபோல பூந்தமல்லி ரயில் நிலையம், தேசிய நெடுஞ்சாலையின் வடக்கு பகுதியில் தூண்களின் மீது உயர்த்தப்பட்ட நிலையமாக அமைய போகிறது. அரக்கோணத்தை கடந்ததுமே, சென்னை - பெங்களூரு விரைவுச்சாலையை ஒட்டியே இந்த ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. இந்த புதிய டெண்டரின்படி, கட்டுமான பணிகள் மட்டுமல்லாமல், ட்ரோன் ஆய்வுகள், நதிகளின் குறுக்கே பாலம் கட்டுவதற்கான திட்டங்கள் என அனைத்துவிதமான பணிகளையும் ஒப்பந்த நிறுவனமே மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல, இந்த 306 கிலோமீட்டர் ஒட்டுமொத்த வழித்தடத்தில் சுமார் 28 கிலோமீட்டர் தூரம் நிலத்தடி சுரங்கப்பாதையாக அமைக்கப்பட உள்ளது. மீதமுள்ள பாதைகள் அனைத்தும் தூண்களின் மீது அமைக்கப்பட்ட மேம்பால பாதையாக இருக்கும்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிரடி
இந்த திட்டத்தில் 3 முக்கிய சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட உள்ளன. அதில் சென்னை சென்ட்ரல் பகுதியில் 1.7 கிலோ மீட்டர் நீள சுரங்கப்பாதையும், ஆந்திராவின் அடர்ந்த கவுண்டின்யா வனவிலங்கு சரணாலய மலைப்பகுதியில் 11.8 கிலோமீட்டர் நீள சுரங்கப்பாதையும், பெங்களூரு நகர்ப்புறப் பகுதியில் 14.7 கிலோமீட்டர் நீள சுரங்கப்பாதையும் அமையவுள்ளன.
இந்த ரயில் நிலையங்கள் தலா 4 ரயில் பாதைகளுடன், ரயில்கள் தடம் மாறுவதற்கான வசதிகளையும் கொண்டிருக்கப் போகின்றன. இப்படியொரு சூப்பரான ரயில் திட்டத்தை சிறப்பாகவும் விரைவாகவும் முடிப்பதற்காக இந்திய ரயில்வேயும், தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் கைகோர்த்து இணைந்து செயல்பட உள்ளன...!!!












Click it and Unblock the Notifications