சென்னை பிராட்வேயில் பார்க்கிங் வசதியுடன் அடுக்குமாடி பேருந்து நிலையம்.. மாநகராட்சி திட்டம்
சென்னை: பிராட்வேயில் பார்க்கிங் வசதியுடன் அடுக்கமாடி பேருந்து நிலையம் கட்ட சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சென்னையில் அதீதமாக உள்ள வாகனங்களின் எண்ணிக்கை காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் கார் வைத்துள்ள பலருக்கும் வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதியும் இல்லை.
இதனால் கண்ட இடங்களில் எல்லாம் கார் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஷாப்பிங் செல்வோரும இஷ்டத்திற்கு வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கிறார்கள் . இது போன்ற காரணங்களாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

பல்லடுக்கு வாகன நிறுத்தம்
இதனால் வாகனங்ளை நிறுத்துவதற்கான வசதிகளை சென்னையில் மேம்படுத்த மாநாகராட்சி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதியின் கீழ் சென்னை தியாகராய நகரில் இரண்டு பல்லடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கும் பணி நடந்து வருகீறது.

4லட்சம் வாகனங்கள்
இதேபோல் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தும் வகையில் ஸ்மார்ட் பார்க்கிங் சிஸ்டமும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. சென்னை மாநகராட்சியில் பொதுமக்கள்-தனியார் பங்களிப்புடன் 2 ஆயிரம் கோடியில் வாகன நிறுத்த மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின்படி 2 லட்சம் இருசக்கர வாகனங்களையும், 2 லட்சம் நான்கு சக்கர வாகனங்களையும் நிறுத்தும் வசதி உள்ள வாகன நிறுத்தம் அமைக்கப்பட உள்ளது.

60 இடங்களில் வாகன நிறுத்தம்
இதற்கான இடங்களை கண்டறிய சென்னை மாநகராட்சியின் அதிகாரிகள் 100 இடங்களை ஆய்வு செய்தனர். அதில் 60 இடங்களில் வாகன நிறுத்தம் அமைக்கப்பட உள்ளன.
இதன்படி பிராட்வே, சைதாப்பேட்டை, திருவான்மியூர் உள்ளிட் 24 இடங்களில் வணிக வளாகங்களுடன் இணைந்த பார்க்கிங் திட்டம் செயல்படுத்தப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிராட்வேயில் புது பஸ் ஸ்டாண்ட்
குறிப்பாக பிராட்வேயில் பார்க்கிங் வசதியுடன் கூடிய அடுக்குமாடி பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது உள்ள பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. மேலதளத்தில் வாகன நிறுத்தமும், கீழ் தளத்தில் பேருந்து நிலையமும் அமைக்கப்பட உள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications