சென்னை பட்ஜெட் 2025.. ஃபுட் கோர்ட் டூ பேட்மிண்டன் கோர்ட் வரை.. இளைஞர்களை கவர்ந்த அறிவிப்புகள்!
சென்னை: சென்னை பெருநகர மாநகராட்சிக்கான பட்ஜெட்டில் இளைஞர்களை கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. ஃபுட் கோர்ட் அமைத்தல், டிஜிட்டல் முறையில் ஸ்மார்ட் பார்க்கிங் வசதி, பூங்காக்களில் புத்தக வாசிப்பு வசதி, வடசென்னையில் பேட்மிண்டன் கோர்ட், புதிய விளையாட்டு உபகரணங்கள் அமைத்தல் என்று ஏராளமான அறிவிப்புகள் வரவேற்பை பெற்று வருகிறது.
2025-26ஆம் நிதியாண்டுக்கான பெருநகர சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் மேயர் பிரியா, பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார். சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் ரூ.5,1245.52 கோடி மதிப்பீட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலாக ரூ.681 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பட்ஜெட் ரூ.4,464 கோடிக்கு உருவாக்கப்பட்டிருந்தது. இதன்படி சென்னை மாநகராட்சியில் 2 இடங்களில் food court அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளுடன் சுகாதாரமான சூழ்நிலை கொண்ட உணவு விற்பனை மண்டலங்கள் முதற்கட்டமாக 2 இடங்களில் செயல்படுத்தப்படவுள்ளது.
அதேபோல் விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறுவதற்கு ஏதுவாக விளையாட்டுத் திடல்களை மேம்படுத்தியது அவசியமான ஒன்றாகும். அதற்காக மாநகராட்சிக்கு உட்பட 150 விளையாட்டுத் திடல்களில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் புதிய விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் முக்கியமான 171 விளையாட்டுத் திடல்களில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பாதுகாவலர்கள் பணியமர்த்த ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள பூங்காக்களில் அதிகமாக பயன்படுத்தும் 70 பூங்காக்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஒரு பகுதியில் கூரை அமைத்து இருக்கை வசதியுடன் கூடிய புத்தக வாசிப்பு மண்டலங்கள் அமைக்கப்படும் என்றும், அதற்காக ரூ.2 கோடி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் வடசென்னை இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்த ஆண்டார்குப்பம் மற்றும் பர்மா நகர் ஆகிய 2 இடங்களில் பேட்மிண்டன் கோர்ட் அமைக்க ரூ.2.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் மேம்பாலங்கள் மற்றும் ரயில்வே மேம்பாலங்களின் கீழ்ப்பகுதியினை உகந்த முறையில் அழகுபடுத்திட ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் போக்குவரர்த்து மேலாண்மைக்காக டிஜிட்டல் முறையில் ஸ்மார்ட் பார்க்கிங் வசதி பொது மற்றும் தனியார் பங்களிப்பு முறையில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக வாகன நெரிசல் குறைவதோடு, கூடுதல் வருவாயும் மாநகராட்சிக்கும் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications