ஸ்டாலின் முதல்வராவார் என நம்பினேன்! ஆனால் தெய்வம் வேறு நினைத்துவிட்டது! காதர் மொய்தீன் "வேதனை"
சென்னை: சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி வென்று ஸ்டாலின் முதல்வராவார் என ஐயூஎம்எல் உழைத்தது, ஆனால் இறைவனின் நாட்டம் வேறாக இருந்தது என தவெக வென்றது குறித்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயபுரத்தில் மாநில பொதுக் குழு கூட்டம் இன்று நடந்தது. தேசிய தலைவர் காதர் மொய்தீன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் 480 பேர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் மிக தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

அதில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவது, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ள இடங்களை கண்டறிய ஆயத்த பணிகளை செய்வது, இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் கூட்டணி இல்லை, மேற்கண்ட தேர்தல்களில் யாருடன் கூட்டணி என்பதை பிறகு அறிவிப்பது, பல்வேறு சிறையில் தண்டனை முடிந்தும் வாடும் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த 22 ஆயுள் சிறைவாசிகளுக்கு விடுதலை என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்திற்கு பிறகு காதர்மொய்தீன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
60 ஆண்டுகாலம் திமுகவுடன் ஐயூஎம்எல் பயணித்தது. தேர்தலில் திமுக, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஐயூஎம்எல் 2 தொகுதிகளில் வென்றது.
நடந்து முடிந்த தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் வெற்றி பெற்று முதல்வராவார் என நம்பி ஐயூஎம்எல் உழைத்தது. ஆனால் இறைவனின் நாட்டம் வேறாகிவிட்டது.
தற்போது தவெக அரசில் அங்கம் வகிப்பதால் திமுக கூட்டணியில் தொடர முடியாது. விசில் சப்தம் எல்லா இடங்களில் ஊதப்பட்டு மக்கள் விஜய் பக்கம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.
தவெக நல்லாட்சி தொடர வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள், நாங்களும் விரும்புகிறோம். ஐயூஎம்எல்-லை தவெக அமைச்சரவையில் இணைத்த விஜய்க்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
உள்ளாட்சி, சட்டசபை, நாடாளுமன்றம் தேர்தலிலும் தவெகவுக்கு ஆதரவளிப்போம். முன்பு மதசார்பற்ற கூட்டணியில் பயணித்தோம். தற்போது பெயர் சூட்டப்படாத கூட்டணியில் இருக்கிறோம். பெயர் சூட்டிய பிறகு அந்த பெயரை பயன்படுத்துவோம்.
பெண்களுக்கு எதிரான பிரச்சினை நேற்று இன்றா நடக்கிறது. தவெக ஆட்சியை மக்கள் வரவேற்கிறார்கள். சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையினர் அமைக்கப்பட்டுள்ளனர். இனி எந்த பெண்களும் பாதிக்கப்படமாட்டார்கள்.
தவெக ஆட்சி அமைய நிபந்தனை இன்றி ஆதரவு தந்தோம். அது குறித்து ஸ்டாலினிடமும் விளக்கினோம். குடியரசுத் தலைவர் ஆட்சி, ஆளுநர் ஆட்சி என்றாலே அது மறைமுகமாக மத்திய அரசின் ஆட்சி என்பதால்தான் தவெகவுக்கு ஆதரவு கொடுத்தோம். இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நிலையில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு கோபமடைந்த காதர் மொய்தீன், ஜனநாயகக் கடமையாக ஓட்டு போட வேண்டும் என சொன்னேன் , திமுக கூட்டணிக்கு ஓட்டு போட வேண்டும் என சொல்லவில்லை.
திமுகவுக்கு ஓட்டு போடுவது 6ஆவது கடமை என நான் சொல்லவில்லை. நான் சொல்லாததை எதற்காக கேட்கிறீர்கள் என காதர் மொய்தீன் கடுமையான கோபத்திற்கு சென்றார். அவரை உடனிருந்தவர்கள் சமாதானம் செய்தனர்.












Click it and Unblock the Notifications