கொலை, கஞ்சா, மோசடி கேஸ்.. கூடி கொண்டே போகும் ஹேமந்தின் கிரைம் ரேட்.. குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை
சென்னை: சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேமந்திடம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேமந்த். இருவரும் காதலித்து வந்த நிலையில் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு இருவரும் அவசர அவசரமாக பதிவு திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் இருவரும் நசரத்பேட்டையில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த போது சித்ரா தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஹேமந்த் கைது செய்யப்பட்டார்.
பணத்தை கேட்டால் மிரட்டல்
சித்ராவின் தாய் ஹேமந்தின் மீது புகார் கூறியதை அடுத்து அவரிடம் ஆர்டிஓ விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் ஹேமந்துக்கு சில அரசியல்வாதிகளுடன் தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது. இதை வைத்துக் கொண்டு மருத்துவ படிப்பில் சேர சீட் வாங்கித் தருவதாக கூறி ஏராளமானோரிடம் மோசடி செய்துவிட்டு பணத்தை திருப்பி கேட்ட போது அவர்களை மிரட்டியது தெரியவந்தது.
கஞ்சா பறிமுதல்
மேலும் சித்ராவிடம் இருந்து ஹேமந்த் அடிக்கடி காசு வாங்கிக் கொண்டு சென்றது தெரியவந்துள்ளது. மேலும் திருவான்மியூரில் புதிதாக கட்டும் வீட்டையும் அவர் சித்ராவிடம் இருந்து அபகரிக்க திட்டமிட்டதாகவும் சொல்கிறார்கள். இந்த நிலையில் சித்ராவின் கைப்பையிலிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சித்ரா
இந்த கஞ்சாவை வேறு யாரேனும் சித்ராவுக்கு கொடுத்தனரா இல்லை ஹேமந்தே தனக்கு இருக்கும் பெரிய வீட்டு பையன்களின் செல்வாக்கால் சித்ராவுக்கு கஞ்சா பழக்கத்தை பழக்கிவிட்டாரா என தெரியவில்லை. எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் சித்ராவை ஹேமந்த் நெருங்கியது எப்படி என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது.
மோசடி செய்த ஹேமந்த்
இந்த நிலையில் மருத்துவ படிப்புக்கு சீட் வாங்கித் தருவதாக ஹேமந்த் பணத்தை பெற்று கொண்டு ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து ஹேமந்த்திடம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இப்படியாக நாளுக்கு நாள் ஹேமந்த் மீது குற்ற வழக்குகள் கூடி வருகிறது.