கொதித்தெழுந்த மாணவர்கள்.. “ஆளுநரே வெளியேறுங்கள்” தமிழ்நாடு எங்கும் கல்லூரிகள் முன் வெடித்த போராட்டம்
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டசபைக் கூட்டத் தொடரின் முதல் நாளில் தமிழ்நாடு அரசு கொடுத்த அச்சிடப்பட்ட உரையில் முக்கிய வாசகங்கள், வார்த்தைகளை வாசிக்காமல் தவிர்த்து, தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பே வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், ஆளுநர் ரவியை திரும்பப்பெறக்கோரி சென்னை, சேலம் உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று 2023 ஆம் ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், அதில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசின் நோக்கம், செயல்பாடுகள், வளர்ச்சித் திட்டங்கள் திட்டங்கள் குறித்து பேசினார்.
ஆனால், ஆளுநர் ரவியின் உரையில், தமிழ்நாடு அரசு தயாரித்து அச்சிட்டு கொடுத்ததில் அரசு குறிப்பிட்டு இருந்த தகவல்களை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காமல் தவிர்த்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தவறவிட்ட வார்த்தைகள்
இதில் ஆளுநர் ரவி "சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகள் இந்த அரசின் அடித்தளமாக அமைந்துள்ளன. தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற தலைவர்களின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பின்பற்றி திராவிட மாடல் ஆட்சியை இந்த அரசு வழங்குகிறது." என்ற பத்தி படிக்கவில்லை.

தமிழ்நாடு எங்கே?
அதேபோல் தமிழ்நாடு என்று வரும் ஒரு இடத்தில் அதை சொல்லாமல் "திஸ் கவர்மெண்ட்" என்று ஆங்கிலத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி படித்ததாகவும், தமிழ்நாடு, திராவிட மாடல் ஆகிய வார்த்தைகளை அவர் புறக்கணித்தார் என்றும் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. ஆளுநர் உரைக்கு பிறகு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்த உரையில் இடம்பெற்ற பல வாசகங்களும், வார்த்தைகளும் ஆளுநர் உரையில் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அமைதிப் பூங்கா
இதில் முக்கியமாக, தமிழ்நாடு அரசு சட்டம் ஒழுங்கை சிறப்பாக கையாண்டு வருவதால் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்கிறது என்ற தகவலையும் வாசிக்காமல் ஆளுநர் ரவி விட்டுள்ளார். சபாநாயகர் அப்பாவு பேசி முடிந்த பிறகு ஆளுநர் ரவி முன்பாகவே சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது வார்த்தைகளை வாசிக்காததற்காக கண்டனத்தை பதிவு செய்தார்.

முதலமைச்சர் கண்டனம்
ஆளுநர் ஆர்.என்.ரவி அரசு தயாரித்த உரையை படிக்காதது தவறு என்று கண்டித்த மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி தாமாக முன்வந்து வாசித்தது அவைக்குறிப்பில் இடம்பெறக்கூடாது என்றும் அரசு கொடுத்த உரை மட்டுமே அவைக்குறிப்பில் இருக்க வேண்டும் எனவும் தீர்மானம் கொண்டு வந்தார். உடனடியாக இந்த தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

வெளியேறிய ஆளுநர்
தன்னுடைய பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் தன் முன்பே கண்டனம் தெரிவித்ததால் தேசிய கீதம் ஒலிப்பதற்கு முன் ஆளுநர் ஆர்.என்.ரவி அவையில் இருந்து வெளியேறினார். அவரது இந்த செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கீதத்தை அவமதித்துவிட்டதாக சபாநாயகர், அமைச்சர்கள் குற்றம்சாட்டி உள்ளார்கள்.

மாணவர்கள் போராட்டம்
இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து சென்னையில் பல பகுதிகளில் கெட் அவுட் ரவி என்று எழுதி திமுக போஸ்டர்களை ஒட்டி உள்ளது. ட்விட்டரில் #Getoutravi என்ற ஹேஷ்டேக் 2வது நாளாக இன்றும் டிரெண்டிங்கில் உள்ளது. இந்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து சென்னையை அடுத்த பட்டாபிராமில் உள்ள பிரபல கல்லூரியின் மாணவ மாணவிகள் பதாகைகளை கைகளில் ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்டன முழக்கம்
அப்போது "வாழ்க வாழ்க வாழ்கவே! தலைவர் கலைஞர் வாழ்கவே! வாழ்க வாழ்க வாழ்கவே! அறிஞர் அண்ணா வாழ்கவே! வாழ்க வாழ்க வாழ்கவே! அம்பேத்கர் வாழ்கவே! வாழ்க வாழ்க வாழ்கவே! சமூக நீதி வாழ்கவே! திரும்பப்பெறு திரும்பப்பெறு, ஆளுநரை திரும்பப்பெறு. மத்திய அரசே மத்திய அரசே ஆளுநரை திரும்பப்பெறு. வாழ்க வாழ்க வாழ்கவே! தமிழ் மொழி வாழ்கவே! தமிழ்நாடு வாழ்கவே!" என்று அவர்கள் முழக்கமிட்டனர்.

திருத்தணியில் போராட்டம்
அதேபோல் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கல்லூரி நுழைவாயில் வெளியே ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக பதாகைகளை ஏந்தி "வாழ்க! வாழ்க! தமிழ் மொழி வாழ்கவே! பெரியாரின் கொள்கை, அண்ணாவின் கொள்கை ஓங்குக!" என கோசமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாணவர்கள்
சேலம் குமாரசாமி பட்டி பகுதியில் உள்ள சேலம் அரசு கலைக் கல்லூரி முன்பு ஆளுநர் ரவிக்கு எதிராக ஏராளமான மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆளுநர் ரவியின் புகைப்படத்தை ஏந்தி அவருக்கு எதிரான முழக்கங்களை எழுப்பி தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தினர். இதேபோல் எடப்பாடி அரசு கலைக்கல்லூரி முன்பும் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆளுநர் ரவியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications