இதுக்குத்தான் மாஸ்டார்மைன்ட் தேவை.. குமரகுருபரனை ஸ்டாலின் கொண்டு வந்த.. 10 நாட்களில் செம மாற்றம்
சென்னை: சென்னை மாநகராட்சி ஆணையராக குமரகுருபரன் கொண்டு வரப்பட்டு 10 நாட்கள் ஆகிறது. அவர் வந்த இந்த சில நாட்களில் சென்னையில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். முக்கியமாக சென்னையை அழகாக மாற்றுவதற்கான தீவிரமான பணிகளை மேற்கொள்ள தொடங்கி உள்ளார்.
ஏற்கனவே ரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் (ஜிசிசி) ஜூலை 29 முதல் அதன் அனைத்து மண்டலங்களிலும் மாஸ் கிளீன் அப் செய்ய முடிவு செய்து உள்ளது. இரவு நேரங்களில் மிக தீவிரமாக மாஸ் கிளீன் அப் செய்ய முடிவு செய்துள்ளனர்.

இது போக மாநகராட்சியின் சாலைகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களை மூன்று நாட்களுக்குள் தானாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் காவல்துறை உதவியுடன் அறிவுறுத்தல் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதன் மூலம் சாலை ஓரம் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கடைகள் அகற்றப்படும்.
மேலும் கைவிடப்பட்ட வாகனங்களை பெருமளவில் சுத்தம் செய்து அகற்றும் என ஆணையர் ஜே. குமரகுருபரன் அறிவித்துள்ளார். முதல் கட்டமாக ஜூலை 22ம் தேதி பைலட் திட்டமாக சென்னையில் 3 மண்டலங்களில் சுத்தம் செய்யும் பணிகள் நடந்தன. ஜூலை 29.. அதாவது இன்று இரவு முதல் சென்னையின் அனைத்து பக்கங்களிலும் இந்த மாற்றங்களை செய்ய உள்ளனர். சென்னையில் கைவிடப்பட்ட வாகனங்களை நீக்க முடிவு செய்துள்ளனர். செப்டம்பரில் பருவமழை தொடங்குவதற்கு முன் மற்றொரு சுற்று வெகுஜன சுத்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சோதனை: முன்னதாக, அண்ணாநகர், ராயபுரம், அடையாறு உள்ளிட்ட பல மண்டலங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் சமுதாயக்கூடங்களில் உள்ள பல்வேறு மீட்பு மையங்கள் மற்றும் சமையலறைகளை ஆணையர் ஆய்வு செய்தார். இந்த மையங்களில் மின்சாரம், குடிநீர், செல்போன் சார்ஜ் செய்யும் வசதி, கழிப்பறைகள், ஜெனரேட்டர்கள் போன்ற அத்தியாவசிய வசதிகள் இருப்பதை உறுதி செய்ய மருத்துவ அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதேபோல் ஆனையிறவுப் பாலம் (39.73 கோடி மதிப்பில்), கணேசபுரத்தில் ரயில்வே மேம்பாலம் (₹226.5 கோடி), போஜராஜா நகர் லெவல் கிராசிங் (₹30.13 கோடி) உள்ளிட்ட உள்கட்டமைப்புத் திட்டங்களை விரைந்து முடிக்க அதிகாரிகளை அவர் வலியுறுத்தினார்.
மேலும், கண்ணப்பர் திடலில் ₹6.20 கோடி மதிப்பிலான விளையாட்டு மைதானம் மற்றும் ஆண்ட்ரூஸ் தேவாலய வளாகத்தில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை திரு.குமரகுருபரன் பார்வையிட்டார். வடகிழக்கு பருவமழை தயார்நிலை - மழைநீர் வடிகால்களை தூர்வாருதல் மற்றும் மீட்பு பணிகளுக்கு வாகனங்கள் மற்றும் இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திருப்பது குறித்து அவர் அறிவுறுத்தினார்.
குமரகுருபரன் ஐஏஎஸ்: சென்னை மாநகராட்சி ஆணையராக குமரகுருபரன் ஐஏஎஸ் பதவி ஏற்றுள்ள நிலையில் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முக்கியமாக வெறும் ஒரு வாரத்தில் சென்னையில் அதிரடி ஆக்சன்களை மேற்கொண்டு வருகிறார்.
சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையராக ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். குமரகுருபரன் ஐ ஏ எஸ் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகி உள்ளார். நாய்க்கடி விவகாரம் மற்றும் சென்னையில் மாடுகள் தொல்லை விவகாரத்தில் இவர் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார்கள் வைக்கப்பட்டது.
முக்கியமாக சென்னை நங்கநல்லூர் பகுதியில் மாடுகள் உலா வரும் விவகாரத்தில் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார்கள் வைக்கப்பட்டன. சமீபத்தில் ராயபுரம் பகுதியில் 5 குழந்தைகள் உட்பட 29 பேரை வெறிநாய் கடித்தது. காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு வெறிநாய் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு, அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அங்கே மக்களை கடித்த நாயை பொதுமக்கள் அடித்துக் கொன்றனர். பிரேதப் பரிசோதனையில் அந்த நாய்க்கு ரேபீஸ் வெறிநாய் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அதை தொடர்ந்து பல இடங்களில் குழந்தைகள் நாய்கள் மூலம் கடிக்கப்பட்டன.
ராட்வீலர்: கடந்த மே மாதம் கூட சென்னை ஆயிரம் விளக்கு பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை நாய்கள் கடித்து குதறிய சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தடை செய்யப்பட்ட ராட்வீலர் நாய்களை வளர்த்து வந்த உரிமையாளர், சிறுமியை அவை கடித்த போது கண்டு கொள்ளாமல் பார்த்துக் கொண்டிருந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் புகார் கூறியுள்ளனர்.
ஸ்டாலின் ஆக்சன்: சென்னை மாநகராட்சி ஆணையராக குமரகுருபரன் ஐஏஎஸ் பதவி ஏற்றுள்ள நிலையில் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். நங்கநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மொத்தம் 9 கால்நடைகள் பிடிக்கப்பட்டு கிடங்கில் அடைக்கப்பட்டன. மேலும், பள்ளிக்கரணையில் இருந்து 2 மாடுகளை பிடித்து பறிமுதல் செய்தனர். சென்னை முழுவதும் கால்நடைகள் தேடி பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது.
அதோடு இல்லாமல் தற்போது சென்னையில் உள்ளே பெரும்பாலான பகுதிகளில் சுத்தம் செய்யும் பணிகளும் நடக்கின்றன. இரவு நேரத்தில் சென்னையை முழுக்க சுத்தம் செய்யும் பணிகள் ஒரு பக்கம் நடக்கின்றன. டன் கணக்கில் மணல் அள்ளப்படுகிறது. அதோடு இல்லாமல் சென்னையில் சாலை ஓரம் நிறுத்தப்பட்டு அப்படியே விடப்பட்ட வாகனங்கள் நீக்கப்படுகின்றன. வந்த ஒரு வாரத்தில் குமரகுருபரன் அதிரடியை காட்டி வருகிறார்.












Click it and Unblock the Notifications