கேரி பேக்கிற்கு காசு.. பிரபல நிறுவனம் வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு!
சென்னை: இலவசம் எனக் கூறிவிட்டு கேரி பேக்கிற்கும் பணம் வசூல் செய்த ஜவுளி நிறுவனம், அதன் வாடிக்கையாளருக்கு 15 ஆயிரம் இழப்பீடு வழங்க சென்னை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பெரம்பூரில் உள்ள EASY BUY ஜவுளி நிறுவனத்தில் அயனாவரத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் கடந்த 2023 ஆம் ஆண்டு 8,373 ரூபாய்க்கு உடைகளை வாங்கியுள்ளார். அதனை எடுத்து செல்வதற்கு 2 பேப்பர் கேரி பேக் வழங்கப்பட்டு, பின்னர் பில்லிங் பிரிவில் அந்த கேரி பேக்கிற்கு 16 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

அப்போது ஸ்ரீதர், கேரி பேக்கிற்கு இலவசம் என தெரிவித்து விட்டு அதற்கு 16 ரூபாய் வசூலிப்பதை ஏற்க முடியாது என அந்நிறுவனத்திடம் முறையிட்டுள்ளார். அதற்கு அந்நிறுவனம் 16 ரூபாயை திரும்பத் தர மறுத்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் அந்த நிறுவனம் எந்த பதிலும் அளிக்கவில்லை.
இதைத் தொடர்ந்து, சென்னை மாவட்ட நுகர்வோர் குறைத்தீர்வு ஆணையத்தில் ஸ்ரீதர் புகார் மனு அளித்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதித்துறை தலைவர் கோபிநாத், உறுப்பினர்கள் கவிதா கண்ணன், ராமமூர்த்தி அமர்வு, கேரி பேக் இலவசம் அல்ல, அதற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு தெரியும் வகையில் பதாகைகளை வைக்க அறிவுறுத்தினர்.
பின்னர் உத்தரவிட்ட நீதிபதிகள், இலவசம் என கூறி பணத்தை வசூல் செய்தது முறையற்ற வணிகம் எனக்கூறி, வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக 10 ஆயிரம் ரூபாய் வழக்கு செலவாக 5 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 15 ஆயிரம் ரூபாயை 2 மாதத்தில் ஸ்ரீதருக்கு இழப்பீடாக வழங்க EASY BUY நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.
இந்த இழப்பீட்டுத் தொகையை 2 மாதத்தில் வழங்க தவறினால் அந்த தொகையை செலுத்தும் வரை ஆண்டுக்கு 9% வட்டியுடன் இழப்பீட்டை வழங்கவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.












Click it and Unblock the Notifications