16 ரூபாய் வாங்கியதற்கு ரூ.15000 வாங்க போகும் சென்னைக்காரர்.. ஜவுளி கடைகளுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு
சென்னை: சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த எம்.ஸ்ரீதர் என்பவர் எந்தவித அறிவிப்பு பலகையும் வைக்காமல் ஜவுளி கடையில் வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருட்களை எடுத்துச்செல்ல வழங்கப்படும் பைகளுக்கு தனியாக கட்டணம் வசூலிப்பதாக குற்றம்சாட்டி, நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நுகர்வோருக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
பெரிய சூப்பர் மார்க்கெட் கடைகளில், ஜவுளி கடைகளில் வேண்டிய துணிகள், பொருட்களை வாங்கினால் பில் போடும் போது, பை தனியாக வாங்க வேண்டும் என்று வலியுறுத்துவார்கள். அந்த பைக்கு 16 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள். இதை பார்த்து நொந்து போகாத நுகர்வோர்களே கிடையாது. இதற்கு தீர்வு வந்துள்ளது.

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த எம்.ஸ்ரீதர் என்பவர் சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறுகையில், "கடந்த 2023-ம் ஆண்டு பெரம்பூர் ஜவகர்நகரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் 8 ஆயிரத்து 373 ரூபாய்க்கு ஜவுளி வாங்கியிருந்தார். அதனை 2 காகித பைகளில் (காகிதத்தால் செய்யப்பட்ட கேரி பேக்) வைத்து கொடுத்தார்கள்.
பில் தொகையை பார்த்தபோது, காகித பைக்காக ரூ.16 கட்டணம் வசூலித்திருந்தார்கள். காகித பைக்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும் என எந்தவித அறிவிப்பு பலகையும் வைக்கப்படவில்லை. அதற்காக கட்டணம் வசூலித்தது சேவை குறைபாடு ஆகும். எனவே, இழப்பீடாக ரூ.25 ஆயிரம் வழங்க உத்தரவிட வேண்டும்' என்று மனுவில் கூறியிருந்தார்.
இதுதொடர்பாக சென்னையில் உள்ள அந்த ஜவுளிக்கடை தரப்பில் பதில் அளிக்க நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, ஜவுளிக்கடை தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. அதில், 'பிளாஸ்டிக் பைகளுக்கு அரசு தடை விதித்துள்ள நிலையில் அதிக விலை கொடுத்துதான் காகித பைகளை வாங்க வேண்டியதிருக்கிறது. கடையில் வாங்கும் பொருட்களுக்கு கண்டிப்பாக இலவசமாக பை கொடுக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் கோர முடியாது' என்று தெரிவிக்கப்பட்டது.
சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் கோபிநாத், உறுப்பினர்கள் கவிதா கண்ணன், ராமமூர்த்தி ஆகியோர் உத்தரவு பிறப்பித்தனர். அந்த உத்தரவில் கூறுகையில், பெரும்பாலான கடைகளில் தொகையை செலுத்தும்போது தான் பொருட்களை வைத்து தரும் பைகளுக்கென தனியாக கட்டணம் வசூலிப்பது வாடிக்கையாளர்களுக்கு தெரியவருகிறது.
'பொருட்களை எடுத்து செல்வதற்காக வழங்கப்படும் பைகள் இலவசம் அல்ல. அதற்காக தனியாக கட்டணம் செலுத்த வேண்டும்' என வாடிக்கையாளர்களுக்கு தெரியும் வகையில் அறிவிப்பு பலகை வைத்தால் தேவைப்படும் வாடிக்கையாளர்கள் பைகளை வாங்கி கொள்வார்கள். அவ்வாறு எந்தவித அறிவிப்பு பலகையும் வைக்காமல் வாடிக்கையாளர்களுக்கு பைகளை வழங்கிவிட்டு அதற்கென தனியாக கட்டணம் செலுத்த சொல்வது நியாயமே இல்லை.
மனுதாரர் பொருட்கள் வாங்கிய ஜவுளி கடையில் அறிவிப்பு பலகை எதுவும் வைக்கப்படாமல், பைகளுக்காக தனியாக கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது, சேவை குறைபாடு ஆகும். எனவே, ஜவுளிக்கடை சார்பில் மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரமும், வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருட்களை எடுத்து செல்ல இலவசமாக பைகள் வழங்கப்படாது என்றும், பைகள் தேவைப்படின் அதற்காக தனியாக கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் எல்லோருக்கும் தெரியும்படி ஜவுளிகடையில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்" இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.











Click it and Unblock the Notifications