பழைய நிலை அப்படியே திரும்புகிறது.. சென்னையில் நிரம்பும் மருத்துவமனை பெட்கள்! டாக்டர்களுக்கும் தொற்று
மருத்துவமனைகளில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ், தொற்றுக்குள்ளாகும் மருத்துவர்கள்
சென்னை: சென்னையில் கொரோனா தொற்று அதிகரிப்பதால், மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் கொரோனாவின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் நான்காயிரத்தைக் கடந்து தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கொரோனா தொற்று பலமடங்காக உயர்ந்து வருகிறது. ஒரே நாளில் சென்னையில் மட்டும் இரண்டாயிரம் பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 43,011 படுக்கைகள் உள்ளன. அதில் தற்போது 1,409 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா தொற்றை கட்டுக்குள் வைக்க தடுப்பூசி முகாம்களை அதிகரித்திருக்கின்றன மத்திய மாநில அரசுகள்.
இதனால் தமிழகத்தில் பல கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. திரையரங்கு, ஜிம் உள்ளிட்டவற்றில் 50 சதவிகிதம் மட்டுமே பயன்படுத்துவது, இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு, கோயில்கள் திறப்பதில் கட்டுப்பாடு என தமிழக அரசு கொரோனாவைக் கட்டுப்படுத்த பல வழிகளை கையாண்டு வருகின்றது.

ஒமிக்ரான்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 90,928 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய 58,097 என்ற தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை விட 56 சதவீதம் அதிகமாகும். தற்போது நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பால் 2,630 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 797 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் ஒமிக்ரான் பரவல் அதிகரித்துள்ளது.

மருத்துவமனைகள்
ஒமிக்ரான் பரவல் அதிகரித்ததும், அதற்காகவே சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டன. மருத்துவமனைகளில் படுக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கொரோனா இரண்டாவது அலையில் ஆக்சிஜன் படுக்கைக் கிடைக்காமல் பலர் உயிரிழக்க நேர்ந்தது. அதனால் இந்தமுறை ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் போதுமான அளவு வைக்கப்பட்டுள்ளன.

தயார் நிலையில் மருத்துவக்கல்லூரிகள்
சென்னையில் 6 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருகின்றன. ஒமிக்ரான் அதிகரித்தால் அதை சமாளிக்கத்தேவையான வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. அதிகமான படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. சென்னை ராஜீவ் காந்தி, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், ஓமந்தூரார், கிண்டி கொரோனா மருத்துவமனை ஆகிய அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் தயார்படுத்தப்பட்டு உள்ளன. மொத்தம் 8,660 படுக்கைகள் தயார்படுத்தப்பட்டு உள்ளன.

தீவிர நோயாளிகளுக்கே முன்னுரிமை
''தமிழகத்தில் நோய் அறிகுறி இல்லாமல், ஆக்சிஜன் அளவும் குறையாமல் இருப்பவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படக்கூடாது. அவ்வாறு அனுமதித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஏனெனில், நோய் தீவிரம் அதிகம் உள்ளவர்களுக்கு மருத்துவ சிகிச்சையின் தேவை அதிகம். இப்படியாக மருத்துவமனை படுக்கைகளில், அறிகுறிகள் மற்றும் ஆக்சிஜன் அளவு பொறுத்தே முன்னுரிமை அளிக்கப்படும்'' என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

மருத்துவர்களுக்கு கொரோனா
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் இரண்டு டாக்டர்களுக்கு முதலில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதன்பிறகு 14 பயிற்சி மருத்துவர்கள், 4 நர்சுகள் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட மருத்துவ பணியாளர்களுக்கு அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்களுக்குத் தொற்று ஏற்பட்டாலும், அதிலிருந்து மீள பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தப்பட இருக்கிறது. இதனால் தொற்றின் தாக்கத்தில் இருந்து தற்காத்துகொள்ளலாம். தடுப்பூசியே கொரோனாவில் இருந்து நம்மை காக்கும் பேராயுதம் என மத்திய மாநில அரசுகள் தடுப்பூசி முகாம்களை அதிகரித்துள்ளன.












Click it and Unblock the Notifications