குழாய் மூலம் வீடுகளுக்கே வரும் கேஸ்.. 8 இடங்களில் திட்டத்தை செயல்படுத்த சென்னை மாநகராட்சி அனுமதி!
சென்னை: சென்னையில் 8 இடங்களில் குழாய் மூலம் வீடுகளுக்கு கேஸ் விநியோகம் செய்ய சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. சென்னையில் 8 இடங்களில் எரிவாயு குழாய் அமைக்கும் பணியை மேற்கொள்ள TIDCOவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
27 இடங்களில் திட்டத்தை செயல்படுத்த TIDCO அனுமதி கோரிய நிலையில் 8 இடங்களுக்கு அனுமதி அளித்து சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், இறக்குமதி செலவைக் குறைப்பதற்காகவும் குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் செயல்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் இயற்கை எரிவாயு வழங்கும் திட்டத்தை டோரண்ட் கேஸ் நிறுவனம் செயல்படுத்த உள்ளது.
சென்னையில் குழாய்கள் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வழங்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையம் தற்போது அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், சென்னையில் 8 பகுதிகளில் குழாய் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்தை செயல்படுத்த டிட்கோ நிறுவனத்துக்கு பெருநகர சென்னை மாநகராட்சி கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தலைமையில் ரிப்பன் மாளிகையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 27 இடங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த டிட்கோ (TIDCO) நிறுவனத்தின் சார்பில் மாநகராட்சியிடம் அனுமதி கோரப்பட்டது.
இந்த நிலையில் 8 இடங்களில் மட்டுமே குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயு விநியோகம் செய்வதற்கான சாத்தியக்கூறு இருப்பதால் அந்த 8 இடங்களில் பணியை மேற்கொள்ள டிட்கோ நிறுவனத்திற்கு மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அம்பத்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட வடக்கு அவென்யூ 26 வது தெரு, கண்ணாத்தாள் சாலை, ஆபீஸ் காலனி டி.வி.எஸ் அவென்யூ, அண்ணா நகர் மண்டலத்துக்கு உட்பட்ட பிளாக் 40 வது தெரு, ஸ்பர் டேங்க் சாலை, தேனாம்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட டாக்டர் பெசன்ட் சாலை, கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட ஜெய் நகர், நடேசன் நகர் மேற்கு உள்ளிட்ட இடங்களில் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications