சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு கலர் ஐடி கார்டு.. பட்ஜெட்டில் மேயர் அறிவிப்பு
சென்னை: சென்னை மாநகராட்சியின் 2024- 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை ரிப்பன் கட்டடத்தில் உள்ள கூட்ட அரங்கில் மேயர் ஆர்.பிரியா இன்று தாக்கல் செய்தார்.
சென்னை மாநகராட்சியின் மேயராக பதவியேற்ற ஆர்.பிரியா குறுகிய காலகட்டத்திலேயே 2022-2023 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை 2022 ஏப்ரலில் தாக்கல் செய்தார்.

இதையடுத்து 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிதியாண்டுக்கான பட்ஜெட் ரூ 340.25 கோடி பற்றாக்குறையுடன் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையில் 27 திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
மேலும் மக்களைத் தேடி மேயர், மாமன்ற உறுப்பினர்களின் வார்டு மேம்பாட்டு நிதியை உயர்த்தியது, காலை உணவு திட்டத்தை விரிவுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் 2024- 2025 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை இன்று மேயர் பிரியா தாக்கல் செய்தார்.
அவர் ஆற்றிய பட்ஜெட் உரையில் கூறியிருப்பதாவது: தொழிற்பயிற்சி நிலையத்தை மேம்படுத்த புதிய பொருட்கள் வாங்குவதற்கு ரூ 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அது போல் மாநகராட்சி பள்ளி மாணவர்களை கல்விச் சுற்றுலா அழைத்து செல்ல ரூ 47 லட்சம் நிதியும் வண்ண அடையாள அட்டைகளை வழங்க ரூ 61 லட்சம் நிதியும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
அது போல் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு இரு செட் சீரூடை, ஷூ, சாக்ஸ் வழங்கப்படும். 2 கல்லூரிகளில் ரூ 50 லட்சம் செலவில் மகளிர் முன்னேற்றத்திற்கான தொழிற்கல்வி அமைக்கப்படும்.சைதாப்பேட்டை மருத்துவமனையில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த ரூ 7 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சென்னையில் 200 வார்டுகளிலும் மகளிருக்கு ரூ 10 கோடி மதிப்பில் பிரத்யேக உடற்பயிற்சிக்கூடம் அமைக்கப்படும்.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தண்ணீர் ஒழுகாமல் இருக்க வாட்டர் ப்ரூப் திட்டம் செயல்படுத்தப்படும். சென்னை பள்ளிகள் மறுசீரமைப்பு பணிக்கு ரூபாய் 25 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 21 பள்ளிகளுக்கு இந்த திட்டத்தால் பலன் கிடைக்கும். சூளைமேடு, விருகம்பாக்கம் கால்வாய் குறுக்கே கட்டப்பட்டுள்ள பழைய பாலம் இடிக்கப்படும்.
ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் அமைக்கப்படும். சென்னையில் 19 விளையாட்டு திடல்கள் ரூ.5 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படும். சென்னை மாநகராட்சியின் அனைத்து மாநகராட்சி உறுப்பினர்களுக்கும் ‛டேப்' வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநில பேரிடர் தடுப்பு நிதி உள்பட பிற திட்ட நிதிகளில் இருந்து மழைநீர் வடிகால் பணிகளுக்காக 2024-25ம் ஆண்டில் ரூ.537 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications