நல்ல முயற்சி.. சென்னையில் அடுத்தடுத்து நடக்க போகும் 2 விஷயங்கள்.. ககன்தீப் சிங் பேடி உத்தரவு
சென்னை : பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாகவும், பாதுகாப்பற்ற முறையில் விழும் மரக்கிளைகளை அகற்றவும், சாலைகளில் உள்ள பள்ளங்களை மூடவும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி நடவடிக்கை எடுத்து வருகிறார். இது தொடர்பாக இரண்டு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி சார்பில் இன்று வெளியிட்டுள்ள இரண்டு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: "பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாகவும், பாதுகாப்பற்ற முறையில் விழும் நிலையில் உள்ள 19,025 மரங்களின் கிளைகள் பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளன.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் மற்றும் பாதுகாப்பற்ற முறையில் விழும் நிலையில் உள்ள மரங்களின் கிளைகள் மாநகராட்சியின் மூலம் அகற்றப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சி
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பேருந்து மற்றும். உட்புறச் சாலைகளில் 34,224 சாலைகளில் சுமார் 175309 மரங்கள் உள்ளன. மாநகராட்சியின் சார்பில் பருவமழை காலத்திற்கு முன்னதாகவே போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் மற்றும் பாதுகாப்பற்ற முறையில் விழும் நிலையில் உள்ள மரக்கிளைகளை அகற்ற எற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, மாநகராட்சியில் 6 நவீன ஹைட்ராலிக் இயந்திரங்களும் 2 மரம் அறுக்கும் இயந்திரம் பொருத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் 15 மண்டலங்களிலும் உள்ள 371 கையினால் இயக்கும் மர அறுவை இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மரங்களின் கிளைகள்
கடந்த 3 மாதங்களில் போக்குவரத்திற்கு இடையூறாகவும் விழும் நிலையில் இருந்த சுமார் 19,025 மரக்கிளைகள் மாநகராட்சி பணியாளர்களால் அகற்றப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாகவும், பாதுகாப்பற்ற முறையில் விழும் நிலையில் உள்ள மரங்களின் கிளைகள் குறித்து 1913 என்ற உதவி எண்ணிற்கும். 044-2561 9206, 2561 9207 மற்றும் 2561 9208 ஆகிய கட்டுப்பாட்டு அறை எண்களுக்கும், வட்டார துணை ஆணையாளர் அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்களிலும் தகவல் தெரிவிக்கலாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

சென்னை சாலைகள்
பருவமழையின் காரணமாக பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சாலைகளில் ஏற்படும் பள்ளம் மற்றும் குழிகளை உடனடியாக சரிசெய்ய மண்டல செயற்பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியால் 387 கி.மீ. நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5270 கி.மீ. நீளமுள்ள 34,540 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இச்சாலைகளில் நாள்தோறும் தூய்மைப் பணியாளர்கள் மூலம் துப்புரவு பணிகள் மற்றும் சேதமடைந்த சாலைகளை கண்டறிந்து சீர் செய்தல் போன்ற பல்வேறு பணிகள் மாநகராட்சியின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

15 மண்டலங்கள்
தற்பொழுது, வடகிழக்கு பருவமழை தொடங்கி தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலைகளின் மேற்புறங்களில் பள்ளங்களும், போக்குவரத்து சாலைகளில் குழிகளும் ஏற்பட்டுள்ளது. தற்பொழுது மழைக்காலமாக இருப்பினும், சாலைகனை சீரமைக்க காத்திருக்காமல் உடனடியாக சிறுபள்ளங்கள் மற்றும் குழிகளை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளனது. சாலைகளில் பயணிக்கும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் செல்வதற்கு எதுவாக உடனடியாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஒரு மண்டலத்திற்கு ரூ.10 இலட்சம் என 15 மண்டலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தார் கலவை
சாலைகளில் உள்ள பள்ளங்கள் மற்றும் குழிகள் குறித்து மாநகராட்சியின் செயற்பொறியாளர்கள் மற்றும் உதவி/இளநிலைப் பொறியாளர்கள் மூலம் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 942 சாலைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி, பணிகளை மேற்கொள்ளும் பொழுது பள்ளம் மற்றும் குழி உள்ள இடங்களை தேவையான அளவு ஆழத்திற்கு தோண்டி எடுத்து, ஜல்லி கலவை (Wet mixed Macadam), சிமெண்ட் கான்கிரீட் கலவை அல்லது குளிர்ந்த தார் கலவை (Cold Mix) கொண்டு சரியான முறையில் நிரப்பப்பட வேண்டும் எனவும், மண்டல செயற்பொறியாளர்கள் இப்பணிகளை தீவிரமாக கண்காணித்து உடனடியாக சாலை பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு பொதுமக்களுக்கு பாதுகாப்பான இடையூறு இல்லாத போக்குவரத்தினை உறுதிசெய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

நடவடிக்கை
இந்தப் பணிகளை மேற்கொள்வதற்காக 250 மெட்ரிக் டன் குளிர்ந்த தார் கலவை கையிருப்பில் உள்ளது. மேலும், 250 மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஜல்லி கலவை மற்றும் சிமெண்ட் கான்கிரீட் கலவை தேவையான அளவிற்கு பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாநகராட்சி முடிவு
சென்னையில் பெய்து வரும் மழையின் காரணமாக 0211.2021 அன்று முதல் 03.11.2021 நண்பகல் 12.00 மணிவரை மழைநீர் தேங்கிய 49 இடங்களில் இதுவரை 36 இடங்களில் மழைநீர் மாநகராட்சி பணியாளர்களால் உடனடியாக அகற்றப்பட்டு சரிசெய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களில் சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் பெருநகர சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் 16 சுரங்கப் பாதைகளில் மழைநீர் தேக்கம் இன்றி அவ்வப்பொழுது உடனடியாக அகற்றப்பட்டுள்ளது.

மழைநீர் வடிகால்
மாநகராட்சியின் சார்பில் கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதிகளில் மொத்தம் 751 கி.மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்க திட்டம் வகுக்கப்பட்டு இதுவரை சுமார் 125 கிமீ. நீளத்திற்கு மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் 116 கி.மீ நீளத்திற்கு பணிகள் முடிவற்றுள்ளது. மீதம் 9 கி.மீ. நீளத்திற்கு பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி 2210 இடங்களில் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

ஆய்வு
பெருநகர சென்னை மாநகராட்சி, மாதவரம், தண்டையார்பேட்டை மற்றும் இராயபுரம் மண்டலங்களுக்குட்பட்ட சாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறு பள்ளங்களை சரிசெய்யும் பணிகள் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு தடுப்புகள் மற்றும் விழும் நிலையில் உள்ள மரக்கிளைகள் அகற்றப்படும் பணிகளை அரசு முதன்மைச் செயலாளர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி இன்று (03.112021) பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் துணை ஆணையாளர்கள். வட்டார துணை ஆணையாளர்கள், தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள், சம்பந்தப்பட்ட மண்டலங்களின் மண்டல அலுவலர்கள் மற்றும் செயற்பொறியாளர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட சாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பழுது பார்க்கும் பணிகளை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

1913க்கு அழையுங்கள்
பொதுமக்கள் பெருநகர சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் உட்புறச் சாலைகள் மற்றும் போக்குவரத்து சாலைகளில் பள்ளங்கள், குழிகள் மற்றும் மழைநீர் தேக்கம் இருந்தால் 1913 என்ற உதவி எண்ணிற்கும் 044-2561 9200, 2561 9207 மற்றும் 2501 9208 ஆகிய கட்டுப்பாட்டு அறை எண்களுக்கும். வட்டார துணை ஆணையாளர் அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்களிலும் தகவல் தெரிவிக்கலாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது" இவ்வாறு அந்த அறிவிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications