தி நகரில் கடை கிடைப்பதே அரிது.. வாடகையே செலுத்தாத 300 கடைக்காரர்கள்.. மாநகராட்சி அதிரடி முடிவு
சென்னை: சென்னை தியாகராய நகரின் பாண்டி பஜாரில் உள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் ஒரு வருடத்திற்கும் மேலாக தங்கள் கடைகளுக்கு வாடகை செலுத்தாத 300 கடைக்காரர்களுக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளது.அண்மையில் நேரில் வந்து ஆய்வு செய்த துணை மேயர் மகேஷ் குமார், சென்னை மாநகராட்சியின் வருவாய் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
சென்னையில் தியாகராய நகர் தான் வணிக மையங்களின் முக்கியமான இடம் ஆகும். தியாகராய நகர் பணக்கார்களின் வீடுகள் அதிகம் இருக்கிறது.. சென்னையின் மையப்பகுதியில் இருக்கிறது. ரயில் நிலையமும் பேருந்து நிலையமும் ஒரே இடத்தில் அமைந்துள்ளது.
இந்த பக்கம் தேனாம்பேட்டை, அந்தபக்கம் சைதாப்பேட்டை, பின்பக்கம் மேற்கு மாம்பலம், இடையில் அசோக் நகர், நேராக திரும்பினால் நந்தனம் என சென்னையின் முக்கியமான அனைத்து பகுதிகளும் இணைக்கும் இடத்தில் இருக்கிறது. இதன் காரணமாக வணிக மையமாக திநகர் இருக்கிறது.

தியாகராய நகரில் கடைகள் வாடகைக்கு கிடைப்பது அபூர்வமானது.. அங்கு சாலையில் கடைபோட்டாலே வாழ்க்கை செட்டில் தான்.. சாலையோர கடைகள் இன்று வரை அதிகம் உள்ள பகுதியாக தியாகராய நகர் இருக்கிறது. அதேநேரம் சாலையோர கடைகளை அகற்றி அதை ஒழுங்குப்படுத்த சென்னை மாநகராட்சி எத்தனை முயற்சி எடுத்தாலும் அது கைகொடுக்கவில்லை..
ஏனெனில் ஏழைகள் பலர் அதனை நம்பித்தான் வாழ்கிறார்கள்.. அதேநேரம் பாண்டிபஜாரில் மட்டும் அந்த முயற்சி ஓரளவு வெற்றி பெற்றது. பாண்டி பஜாரில் அனைத்து சாலையோர கடைகளும் அகற்றப்பட்டன. அவர்களுக்கு அங்கேயே சென்னை மாநகராட்சி சார்பில் வணிக வளாகம் கட்டிக்கொடுக்கப்பட்டது. 30 சதுர அடி கொண்ட கடைக்கு மாத வாடகை 3000 ரூபாய் ஆகும்.
அந்த கடைகளில் பல விற்பனையாளர்கள் நிலுவை தொகையை செலுத்தாமல் உள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் நேரில் வந்து ஆய்வு செய்த சென்னை துணை மேயர் மகேஷ் குமார், சென்னை மாநகராட்சியின் வருவாய் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இதையடுத்து பாண்டி பஜாரில் உள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் ஒரு வருடத்திற்கும் மேலாக தங்கள் கடைகளுக்கு வாடகை செலுத்தாத 300 கடைக்காரர்களுக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளது.
மொத்தம் உள்ள 600 கடைகளில் 300 கடைக்காரர்கள் சேர்ந்து வாடகை நிலுவை தொகையாக 3.4 கோடி வரை பாக்கி வைத்துள்ளனர். இந்த பாக்கி வைத்துள்ளவர்கள் பெரும்பாலும் மூன்றாவது மற்றும் நான்காவது தளங்களில் உள்ளவர்கள் ஆவார்.
இதில் பல கடைகள் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் பணத்தை செலுத்த 15 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என்றும் அவ்வாறு செய்யாவிட்டால், அவர்களின் உரிமத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக பாழடைந்த நிலையில் இருந்த சென்னை மாநகராட்சியின் வணிக வளாகத்தை மாநகராட்சி ஊழியர்கள் நேற்று சுத்தம் செய்யத் தொடங்கினர் மற்றும் கழிவுநீர் அடைப்புகளையும் அகற்றினார்கள். வளாகத்திற்குள் 12 பேர் சென்று வரும் வகையில் இரண்டு லிஃப்ட் மற்றும் கழிப்பறைகளை அமைப்பதற்கான மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
லிஃப்ட் இல்லாததால் பல வாடிக்கையாளர்கள் மேல் தளங்களுக்கு வருவதில்லை என்று கூறப்படுவதால் அதற்கு மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. மாநகராட்சி கட்டிடத்திற்கு பெய்ண்ட் அடித்து சிசிடிவி கேமராக்கள் நிறுவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications