கொளுத்தி எடுத்த சென்னை மக்கள்! இன்று 12 மணி வரை 156 மெட்ரிக் டன் பட்டாசு குப்பைகள் அகற்றம்!
சென்னை: சென்னையில் தீபாவளி நாளில் பட்டாசுகள் வெடிக்கப்பட்ட நிலையில், இன்று மதியம் 12 மணி வரை 156.48 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றம் செய்யப்பட்டதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் பட்டாசு கழிவுகளை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
தீபாவளி பண்டிகை நேற்று நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகள் வெடித்து ஏராளமானோர் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தீபாவளி பண்டிகையன்று பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டிருந்தன.

தலைநகர் சென்னையில் நேற்று அதிகாலை முதலே தீபாவளி பட்டாசு சத்தம் காதைக் கிழிக்கத் தொடங்கியது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, காலை 6 முதல் 7 மணி வரையில் ஒரு மணி நேரம், இரவு 7 முதல் 8 மணி வரையில் ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனாலும், இடைப்பட்ட நேரங்களிலும் பெரும்பாலானோர் பட்டாசுகளை வெடித்தனர்.
தீபாவளி பட்டாசுகளை அதிகளவில் வெடித்ததன் காரணமாக சென்னையில் காற்று மாசு ஏற்பட்டது. சென்னை மாநகரமே புகை மண்டலமாக காட்சி அளித்தது. சென்னையில் பெருங்குடி, ஆலந்தூர், அரும்பாக்கம், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் மோசம் என்ற நிலையை எட்டியது. பெருங்குடியில் காற்றின் தரம் 262ஆகவும், ஆலந்தூரில் 258, அரும்பாக்கத்தில் 248, வேளச்சேரியில் 224 என பதிவானது.
சென்னையில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடிப்பவர்களைக் கண்காணிக்க சிறப்பு தனிப்படையும் அமைக்கப்பட்டிருந்தது. சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து பட்டாசுகள் வெடித்ததாக 347 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
சென்னை நகரில் தெருக்களில் பட்டாசு குப்பைகள் குவிந்தன. இந்நிலையில், இன்று தூய்மைப் பணியாளர்கள், பட்டாசு குப்பைகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் நேற்று (அக்டோபர் 31) முதல் இன்று மதியம் வரை 156 மெட்ரிக் டன் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிகபட்சமாக அண்ணாநகர் மண்டலத்தில் 18.5 டன் பட்டாசு கழிவுகள், திருவொற்றியூரில் 14.45 டன் பட்டாசு கழிவுகள், ஆலந்தூரில் 12 டன் பட்டாசு கழிவுகள், மாதவரத்தில் 11.39 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் பட்டாசு கழிவுகளை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். பட்டாசு கழிவுகள் தனியாக சேகரிக்கப்பட்டு, நச்சு கழிவுகள் என்ற பிரிவின் கீழ் கும்மிடிப்பூண்டியில் உள்ள குப்பை சேகரிப்பு நிலையத்துக்கு குண்டு செல்லப்படுகின்றன.












Click it and Unblock the Notifications