சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு.. வீட்டு உரிமையாளர்களே மிஸ் பண்ணீடாதீங்க.. அப்புறம் சிக்கல்
சென்னை : சென்னையில் சொந்த வீடு மற்றும் வணிக வளாகங்கள் உள்பட சொத்துக்கள் வைத்துள்ளோர் சொத்து வரி நிலுவையை செலுத்தாமல் இருந்தால், உடனடியாக அவற்றை செலுத்தி 1 சதவீதம் வட்டியை தவிர்க்குமாறு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு பிரதான வருவாய் ஆதாரமாக சொத்து வரி இருக்கிறது. சென்னை மாநகராட்சிக்குள் மட்டும் 13 லட்சம் சொத்து உரிமையாளர்கள் உள்ளதாகவும் அவர்களிடம் இருந்து அரையாண்டுக்கு 750 கோடி ரூபாய் என, ஆண்டுக்கு 1,500 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது

இந்த வருவாய் ஆதாரத்தை வைத்தே சென்னையில் சாலைகள் பராமரிக்கப்படுகிறது. நகரில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்யப்படுகிறது. சுகாதார தூய்மை பணிகள், திடக்கழிவுகள் அகற்றுதல், தெரு விளக்குகள், பூங்காக்கள் மற்றும் சாலை பராமரித்தல், பொது சுகாதாரம் நோய் தடுப்பு பணி போன்ற அத்தியாவசிய பணிகளை இந்த நிதியைவைத்து தான் சென்னை மாநகராட்சி மேற்கொள்கிறது
சென்னையில் உள்ள 13 லட்சம் சொத்து உரிமையாளர்களில் சுமார் 9 லட்சம் பேர் வரை முறையாக வரியை ஒவ்வொரு நிதியாண்டிலும் செலுத்தி விடுகிறார்கள். ஆனால் சுமார் 3.50 லட்சத்துக்கு மேற்பட்டோர் முறையான சொத்துவரி செலுத்துவது இல்லையாம். சுமார் 200 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வரி செலுத்தாமல் நிலுவையில் இருக்கிறது.
இதனால் இவர்களிடம் சொத்து வரி வசூலிக்க அதிரடி திட்டத்தை சென்னை மாநகராட்சி முன்னெடுத்துள்ளது. இதன்படி, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள் 2023 உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட விதிப்படி, அரையாண்டு காலத்துக்குரிய சொத்து வரியை செலுத்தாதவர்கள், அதாவது கடந்த 2022 -23ம் ஆண்டுக்கான சொத்துவரியை மார்ச் 31ம் தேதிக்குள் செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளவர்களுக்கு, வரித்தொகை மீது மாதத்துக்கு ஒரு சதவீதம் தனிவட்டியுடன் சேர்த்து செலுத்த வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:- "தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகளின் படி 2022-23-ம் அரையாண்டுக்குரிய சொத்துவரியை, கடந்த மார்ச் 31-ந் தேதிக்குள் செலுத்தாத சொத்து உரிமையாளர்கள் மற்றும் நீண்ட காலமாக சொத்துவரி செலுத்தாமல் நிலுவை வைத்துள்ள சொத்து உரிமையாளர்கள் தற்போது, செலுத்த வேண்டிய நிலுவை சொத்துவரியை உடனடியாக செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அரையாண்டு காலத்துக்குரிய சொத்துவரியை செலுத்தாதவர்கள் நிலுவை வைத்துள்ள வரித்தொகை மீது, மாதத்துக்கு 1 சதவீதம் தனிவட்டியுடன் சேர்த்து செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. 13 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்களில், நிலுவை சொத்துவரி செலுத்தாத 3½ லட்சத்துக்கு மேற்பட்ட சொத்து உரிமையாளர்களுக்கு நிலுவை வரித் தொகை மீது 1 சதவீதம் தனிவட்டி விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, நிலுவை வைத்துள்ள சொத்து உரிமையாளர்கள், செலுத்த வேண்டிய நிலுவை சொத்துவரியை உடனடியாக செலுத்தி, மாதம் தோறும் விதிக்கப்படவுள்ள 1 சதவீதம் தனிவட்டி விதிப்பினை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது" இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications