சென்னை முழுவதும் பூங்காக்களை மூட மாநகராட்சி அதிரடி உத்தரவு.. எப்போ வரை தெரியுமா?
சென்னை: சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், டிசம்பர் 3 வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதை அடுத்து சென்னையில் உள்ள அனைத்து பூங்காக்களையும் மூட மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, விரைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என கூறப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் டிசம்பர் 2-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுப்பெறும் என கூறப்பட்டுள்ளது.

மிக்ஜாம் ( Michaung) என பெயரிடப்பட்ட இந்த புயல் வட தமிழகம், தெற்கு ஆந்திர பகுதியை நோக்கி வரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் கன மழை கொட்டி தீர்த்தது. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழை காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி இருந்தது. பல இடங்களில், மழை நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் அவதிஅடைந்தனர்.
இந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்கும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, சென்னை மக்கள் புகாரளிக்கும் வண்ணம் தொலைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கனமழை எச்சரிக்கை திரும்பப் பெறும் வரை, பொதுமக்கள் பாதுகாப்பு கருதி சென்னையிலுள்ள அனைத்து பூங்காக்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கையை அடுத்து சென்னையில் உள்ள அனைத்து பூங்காக்களையும் மூட மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பொது மக்களின் நலன் கருதி கனமழை எச்சரிக்கையை திரும்ப பெறும் வரையில் சென்னையில் உள்ள பூங்காக்களை மூட உத்தரவிடப்படுகிறது என சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications