சென்னை கடைகளுக்கு ஆப்பு.. உடனே இதை செய்யுங்க.. மீறினால் ரத்தாகும் உரிமம்.. ‛ரெய்டு’ வரும் மாநகராட்சி
சென்னை: சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் உள்ள கடைகளில் தமிழில் பெயர் பலகை வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட உள்ளது. இதற்கான ஸ்பெஷல் ரெய்டை மாநகராட்சி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தான் கடைகளில் பெயர் பலகை எப்படி இருக்க வேண்டும்? என்பது பற்றிய முக்கிய விபரம் வெளியாகி உள்ளது.
சென்னை மாநகராட்சியில் மொத்தம் 15 மண்டலங்கள் உள்ளன. இந்த 15 மண்டலங்களில் ஏராளமான கடைகள், வணிகவளாகங்கள் செயல்பட்டு வருகின்றன. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடைகள், வணிக வளாகங்களில் தமிழில் பெயர் பலகை வைத்திருப்பது கட்டாயமாகும்.

ஆனால் அனைத்து கடை, வணிக வளாகங்களின் உரிமையாளர்கள் அதனை பின்பற்றுகிறார்களா? என்றால் இல்லை என்பது தான் பதிலாக உள்ளது. குறிப்பாக சில கடைகளில் ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் பெயர் பலகை பெரிதாகவும், தமிழில் பெயரளவுக்கு மட்டுமே கடைகளின் பெயர்கள் உள்ளன.
சென்னை மாநகராட்சியில் ஆண்டுதோறும் கடைகளின் எண்ணிக்கை என்பது அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 70 ஆயிரம் கடைகளுக்கு உரிமம் என்பது வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் தான் தமிழக அரசின் மூத்த அதிகாரிகளுடன் இந்த வாரம் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பின் விதிகள் 2023ன்படி கடைகளில் பெயர் பலகைகளில் தமிழ் மொழியை இடம்பெற செய்வது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது.
அதன்பிறகு தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளின் உரிமம் என்பது ரத்து செய்யப்பட உள்ளது. அதாவது தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பின் விதிகள் 2023ன்படி பெயர் பலகையில் தமிழ், ஆங்கிலம் அடுத்ததாக மூன்றாவது ஏதாவது ஒரு மொழியில் முறையே 5:3:2 என்ற அளவில் கடைகளின் பெயர் என்பது இருக்க வேண்டும். இதில் விதிமீறும் கடைக்காரர்களின் உரிமம் என்பது ரத்து செய்யப்பட உள்ளது.
இதுதொடர்பாக விரைவில் கடை உரிமையாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் அறிவிப்பு என்பது வழங்கப்பட உள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து கடைகளின் பெயர் பலகை விதியின்படி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மாநகராட்சி அதிகாரிகள் ரெய்டு செய்து கடைகளின் பெயர் பலகை அடிப்படையில் வியாபாரத்துக்கான உரிமத்தை ரத்து செய்ய உள்ளனர்.
தமிழகத்தை பொறுத்தவரை மாநில அரசு தமிழ் மொழியை வளர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் குடியிருப்பு மற்றும் கடைகளுக்கு தமிழில் பெயர் வைக்க ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் பெயர் பலகையை தமிழில் வைக்காத கடைகள் மீதும் தமிழகம் முழுவதும் நடவடிக்கை என்பது எடுக்கப்பட்டு வருகிறது. இப்படியான சூழலில் தான் சென்னை மாநகராட்சியும் இந்த நடவடிக்கையை கையில் எடுக்க உள்ளது.












Click it and Unblock the Notifications