சென்னையே "க்ளீன்" ஆகுது.. நாலாபக்கமும் குவிந்த ஆபிசர்ஸ்..மழை வேற பெய்யுது.. இதெல்லாம் சூப்பர் ஸ்பீடு
சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக சென்னையில் இன்று முதல் கழிவுநீர் குழாய்களில் தூர்வாரும் பணிகள் ஆரம்பமாகி உள்ளன.
4 நாட்களுக்கு முன்பு, வடகிழக்கு பருவமழையை சமாளிப்பது தொடர்பாக சென்னை மாநகராட்சி சார்பில் ஆய்வு கூட்டம் நடந்தது.. அப்போது, சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் சில முக்கிய அறிவுறுத்தல்களை அதிகாரிகளுக்கு வழங்கியிருந்தார்.
வடகிழக்கு பருவமழை: குறிப்பாக, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்ட ராதாகிருஷ்ணன், பழைய அனுபவங்களின் அடிப்படையில் பேரிடர் மேலாண்மையை சிறப்பாக மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியிருந்தார்.

அதேபோல, மக்களுக்கு சிரமங்கள் ஏற்படாத வகையில் பணிகளை செய்ய வேண்டும், நீர்நிலைகளில் ஆகாய தாமரைகளை விரைந்து அகற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அறிவுறுத்தல்: நிவாரண முகாம்களை கண்டறிந்து தயார் செய்து வைத்தல், மழைநீர் தேங்கினால் வெளியேற்ற மின் மோட்டார்களை தயார் நிலையில் வைத்திருத்தல், பள்ளி - மருத்துவமனை உள்ளிட்ட கட்டங்களின் உறுதித் தன்மையை ஆய்வு செய்தல், பொதுமக்களுக்கு பாதிப்பின்றி முன்கூட்டியே திட்டமிட்டு விழிப்புணர்வுடன் செயல்படுதல் உள்ளிட்ட பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், சென்னையில் இன்று முதல், கழிவுநீர் குழாய்களில் தூர்வாரும் பணி பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.. மழைநீர் வடிகால் உள்ளிட்ட பணிகள் நடைபெறு வரும் நிலையில், இன்று முதல், கழிவுநீர் குழாய்களிலும் தூர்வாரும் பணிகள் தொடங்கி உள்ளன.
பணிகள்: இன்று முதல் வருகிற செப்டம்பர் 2ம் தேதி வரை இந்த கழிவுநீர் குழாய்களில் தூர்வாரும் பணி நடைபெறவுள்ளது. அதன்படி, அனைத்து மண்டலங்களிலும் கழிவுநீர் குழாய்கள், இயந்திர நுழைவு வாயில்களில் கசடுகள் அகற்றப்பட உள்ளன.
720 தெருக்களில் உள்ள 5,277 இயந்திர நுழைவு வாயில்களில் தூர்வாரும் பணிகள் நடைபெறவுள்ளது. இயந்திர நுழைவுவாயில்களில் மொத்தம் 300 தூர்வாரும் இயந்திரங்களை கொண்டு தூர்வாரப்பட உள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications