முன்னாடியே இதை செய்திருக்கலாமே.. சென்னை மாநகராட்சியின் அதிரடி.. மலைத்த கட்சிகள்.. வருகிறது அறிவிப்பு
சென்னை: சென்னையை மிக்ஜாம் புயல் புரட்டிபோட்டு விட்டு சென்ற நிலையில், மழைநீர் வடிகால் பணிகள் தீவிரமாகி வருகிறது. மற்றொருபக்கம், மாநகராட்சி மேற்கொண்டுவரும் முக்கிய பணிகள் குறித்த தகவல் ஒன்று கசிந்துள்ளது.
டிசம்பர் மாதத்தில் புரட்டி போட்ட மழையால் சென்னையே கதிகலங்கிவிட்டது.. சென்னையில் அனைத்து பிரதான சாலைகளிலுமே வெள்ளநீர் பெருக்கெடுத்தது.. சென்னையே தனித்தீவு போல காணப்பட்டது. இடுப்பு வரை தண்ணீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினார்கள்.

வெள்ள நீர்: நகரின் முக்கிய பகுதிகளிலேயே புயல் மழை விட்டபிறகும் தேங்கிய மழைநீர் வடிய நீண்ட நேரம் ஆனது. அதிலும், புறநகர்ப் பகுதிகளின் நிலை படுமோசமாகிவிட்டது. தெருக்களிலேயே படகு போக்குவரத்து நடக்கும் அவலம் நடந்தது..
சென்னையில் 98 சதவிகித மழைநீர் வடிகால் பணிகள் முடிந்துவிட்டதால், இனிமேல் எந்த மழை வந்தாலும் மழைநீர் ஒருசொட்டு தேங்காது என்று சொல்லி கொண்டிருந்த நிலையில், பொதுமக்கள் கடும் அதிருப்திக்கு ஆளானார்கள். 4,000 கோடியில் கட்டிய மழைநீர் வடிகால் என்ன ஆச்சு? என்றும் காட்டமாக கேள்விகளை எழுப்ப தொடங்கிவிட்டனர்.
திருமாவளவன்: 4,000 கோடி ரூபாயில் அமைத்த மழைநீர் வடிகால் பணிகளால்தான் சென்னை பெரும் பாதிப்பிலிருந்து தப்பித்தது என்று திமுக தரப்பில் பதில் சொன்னாலும், எதிர்க்கட்சிகள் இதை விடுவதாக இல்லை. வெள்ளை அறிக்கையை விட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கேட்டார். பாஜகவின் வானதியும் கேட்டார். 4,000 கோடி ரூபாய்க்கு அமைத்த மழைநீர் பணிகள் என்ன ஆனது? இந்த அரசால் வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா என்றும் கேள்விகளால் துளைத்தெடுத்தனர்.
இதற்கு நடுவில் திருமாவளவனும் வெள்ளை அறிக்கையை கேட்டது, திமுகவுக்கே லேசான அதிர்ச்சியை தந்திருந்தது. இதற்கு பிறகு திமுக தரப்பில் விளக்கம் ஒன்று தரப்பட்டது.
திமுக பதில்: "சென்னை மொத்தம் 5,166 கோடி ரூபாய் செலவில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போதுவரை 2,191 கோடி ரூபாய்தான் செலவு செய்யப்பட்டிருக்கிறது. மீதத்தொகை இருக்கிறது. அதற்கான பணிகளும் நடந்து வருகிறது" என்று அமைச்சர் நேரு பதிலளித்திருந்தார்.
இந்நிலையில், வெள்ளை அறிக்கையை வெளியிட மாநகராட்சி தரப்பு தற்போது முடிவு செய்துள்ளதாம். அந்தவகையில், இதுவரை சென்னையில் எங்கே மழைநீர் வடிகால் பணிகள் முடிந்துள்ளன? இதற்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது? எந்தெந்த நிதிகளின் கீழ் வடிகால் பணிகள் நடைபெறுகிறது? பணிகள் எப்போது முடியும்? வெள்ளம் ஏற்பட்டதற்கான காரணம் என்ன? போன்ற விவரங்கள் அடங்கிய விரிவான வெள்ளை அறிக்கை தயாராகி வருகிறதாம்.
எதிர்க்கட்சி: இன்னும் சில தினங்களில், இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படலாம் என்கிறார்கள். வெள்ளை அறிக்கை வெளியிடுவதனால், எதிர்க்கட்சிகளின் வாயை அடைத்துவிட முடியும் என்றாலும், இந்த தகவல்களை எல்லாம் முன்னாடியே மாநகராட்சி வெளியிட்டிருக்கலாமே? என்றும் நெட்டிசன்கள் கருத்து சொல்லி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications