ஆஹா.. ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது! இனி குப்பை கொட்டினால் அவ்ளோதான்.. சென்னையில் செம பிளான்!
சென்னை : சென்னை மாநகரில் கூவம், அடையாறு கரையோரங்களில் குப்பை கொட்டுவதை தடுக்க சென்னை மாநகராட்சி செம சூப்பரான திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கியுள்ளார்.
சென்னை மாநகரப் பகுதியில் கூவம், அடையாறு, கொசஸ்தலை ஆறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவை உள்ளன. மழைக்காலங்களில் தண்ணீரை வடியச் செய்வதில் இந்த நீர்வழித் தடங்களின் பங்கு அதிகம். இந்நிலையில், இந்த ஆறுகள் ஆக்கிரமிப்புகளில் சிக்கி, குப்பை மற்றும் கட்டுமானக் கழிவுகளைக் கொட்டுமிடமாக மாறியுள்ளன. கரையோரங்களில் குப்பைகள் பெருமளவில் கொட்டப்படுவதால் ஆறுகளின் அகலமும் குறைந்துவிட்டது.

இதனால் ஆறுகளைப் பாதுகாக்க சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை' உருவாக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ரூ. 2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு, சுற்றுச்சூழல் மீட்டெடுப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. கூவம், அடையாறு இவற்றின் கரையோரப் பகுதிகளை ஆக்கிரமித்திருந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அகற்றப்பட்டு, அவற்றில் குடியேறிய குடும்பங்களுக்கு, மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, ஆறுகளின் கரைகள் பலப்படுத்தப்பட்டு, அப்பகுதியில் கொட்டப்பட்ட குப்பை, கட்டுமானக் கழிவுகள் அகற்றப்பட்டன. தொடர்ந்து குப்பை கொட்டாத வகையில் சுவர்கள் எழுப்பப்பட்டு, கம்பி வேலிகள் அமைக்கப்பட்டன. எனினும், கூவம் ஆற்றின் கரையோரம் புதுப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை போன்ற பகுதிகளில் சிலர் அத்துமீறி குப்பை மற்றும் கழிவுகளைக் கொட்டி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையராக புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், கூவம், அடையாறு கரையோரங்களில் குப்பை கொட்டப்படுவது தொடர்பாக ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
இதையடுத்து சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், "நீர்வழித் தடங்களைத் தூய்மையாகப் பராமரித்து, அப்பகுதியின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பல கோடி செலவிடப்பட்டுள்ளது. எனினும், ஆற்றங்கரையில் சிலர் குப்பை கொட்டி, நீர்நிலையையும், சுற்றுச்சூழலையும் மாசுபடுத்துவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
இத்தகைய விதிமீறலில் ஈடுபடுவோரைக் கண்டறிய, 150க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்புக் கேமராக்களை நிறுவத் திட்டமிட்டுள்ளோம். மேலும் தேவையான இடங்களில் கூடுதலாக கண்காணிப்புக் கேமராக்களை நிறுவவும் முடிவு செய்துள்ளோம். விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு அபராதம் விதிக்கப்படும்" என்று அறிவித்துள்ளார்.
சென்னையின் மாநகரப் பகுதிகளில் உள்ள ஆற்றங்கரைகளில் குப்பைகள் கொட்டப்பட்டு நாசமாக்கப்படுவதை தடுக்க அரசும், மாநகராட்சி நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தும், முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த கண்காணிப்பு கேமரா அமைக்கும் திட்டமாவது, குப்பை கொட்டுவதை முற்றிலுமாக தடுக்குமா என்ற பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications