சென்னையிலேயே முதலிடம்.. பணமில்லாமல் தவித்த +2 மாணவி! 3 வருடத்திற்கு இலவச கல்வி கொடுத்த எத்திராஜ்
சென்னை: கடந்த சில தினங்களுக்கு முன்பு பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் சென்னை மாநகராட்சி பள்ளி அளவில் மாணவி ஜெயஸ்ரீ 572 மதிப்பெண்கள் பெற்று முதல் இடம் பிடித்திருந்தார் அதே நேரத்தில் மேற்படிப்புக்கு பணம் இல்லாமல் தவித்த நிலையில் எத்திராஜ் கல்லூரி கட்டணமே இல்லாமல் இலவச சீட் வழங்கியுள்ளது.
தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பன்னிரண்டாம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மூன்றாம் தேதி முதல் 25ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் நடைபெற்றது. 7518 பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் உள்ளிட்ட 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் தேர்வு எழுதினர். கடந்த மே எட்டாம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது.
இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 95.03 சதவீதமாக உள்ளது. அதாவது 7,92,494 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அந்த வகையில் இந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்கள் ஏராளமான சாதனைகளை படைத்திருக்கின்றனர். இந்தாண்டு அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் 91.94% ஆக உள்ளது. அதேபோல அரசு பள்ளிகளில் மாணவர்கள் தேர்ச்சியில் ஐந்து மாவட்டங்கள் முதல் ஐந்து இடங்களில் இருக்கின்றன.

குறிப்பாக சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளி அளவில் 572 மதிப்பெண்கள் பெற்று சென்னை நுங்கம்பாக்கம் சிஜிஎச்எஸ்எஸ் பள்ளி மாணவி ஜெயஸ்ரீ முதல் இடம் பிடித்திருந்தார். 2023 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 92 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தனது பள்ளி அளவில் அவர் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கூலி தொழிலாளியான அவரது பெற்றோர்கள் கல்லூரி கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இது தொடர்பாக நாளிதழ்களிலும் தொலைக்காட்சிகளிலும் செய்தி வெளியானது.
இதனை அறிந்த எத்திராஜ் கல்லூரி நிர்வாகம் அந்த மாணவியின் பெற்றோரை அழைத்து அவர்கள் மூன்று ஆண்டு எந்த கட்டணமும் செலுத்தாமல் படிப்பதற்கான ஆணையை வழங்கி மாணவியின் குடும்பத்தாரை கௌரவித்துள்ளனர். இது குறித்து கல்லூரியின் சேர்மன் முரளிதரன் பேசும்போது, கல்வி என்பது ஒரு சேவை அதனை இது போன்ற இல்லாத மாணவர்களுக்கு கொடுக்கும் போது அவர்களுடைய வாழ்க்கைத் தரம் மட்டுமில்லாமல் அந்த குடும்பத்தின் வாழ்க்கை தரமே மாறிவிடும் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய மாணவி, நல்ல மதிப்பெண் பெற்று இருந்தும் தன்னால் உயர்கல்வியை தொடர முடியுமா என சந்தேகத்தில் இருந்த நிலையில் எத்திராஜ் கல்லூரி நிர்வாகம் கொடுத்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி படித்து அரசு பணிக்கு செல்வதுதான் என்னுடைய லட்சியம். எத்திராஜ் கல்லூரியின் சேர்மன் என்னை நேரில் வாழ்த்தினார். கல்லூரி விண்ணப்பப் படிவத்தை நிரப்பச் சொன்ன நிலையில், கட்டணமில்லாமல் கல்லூரியில் சேர்ப்பதாக கூறினார். இது என் வாழ்க்கையில் எதிர்பாராத மற்றும் மறக்க முடியாத தருணம்.
இந்த வாய்ப்புக்கு நான் உண்மையிலேயே நன்றியுள்ளவளாக இருக்கிறேன். நான் எத்திராஜ் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற வேண்டும் என்று கனவு கண்டேன். அது நினைவாகியுள்ளது. நான் யுபிஎஸ்சி தேர்வுகளில் தேர்ச்சி பெற்று மத்திய அரசு பணியில் சேர விரும்புகிறேன், அது எப்போதும் என் கனவாக இருந்து வருகிறது. பள்ளி விடுமுறை காலத்திலேயே சிவில் சர்வீசஸுக்குத் தயாராகத் தொடங்கி விட்டேன். கல்லூரியில் சேர்ந்த பிறகு, எனது படிப்போடு சேர்ந்து யுபிஎஸ்சி தேர்வுகளுக்கும் தொடர்ந்து தயாராகத் திட்டமிட்டுள்ளேன்," என்றார்.












Click it and Unblock the Notifications