சென்னை மக்களே மிஸ் பண்ணீடாதீங்க..! உங்களுக்காகவே நடைபெறும்.. கோவாக்சின் 2ஆம் டோஸ் சிறப்பு முகாம்
சென்னை: சென்னை மாநகராட்சியில் பொதுமக்கள் கோவாக்சின் 2ஆம் டோஸ் செலுத்திக் கொள்ள ஏதுவாக இன்றும் நாளையும் சிறப்புத் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது.
Recommended Video
தமிழ்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு ஒரே மாதத்தில் 35 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரத்திற்கும் கீழாகக் குறைந்துள்ளது. இதையடுத்து தடுப்பூசி போடும் பணிகளையும் மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
முன்பு கொரோனா தடுப்பூசிக்கு ஏற்பட்ட பற்றாக்குறை காரணமாகப் பலராலும் சரியான நேரத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது.

கொரோனா தடுப்பூசி
தற்போது பற்றாக்குறை குறைந்துள்ள நிலையில், 2ஆம் டோஸ் எடுத்துக் கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளித்த தடுப்பூசி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் பொதுமக்கள் கோவாக்சின் 2ஆம் டோஸ் செலுத்திக் கொள்ள ஏதுவாக இன்றும் நாளையும் சிறப்புத் தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சரியான கால இடைவெளியில் தடுப்பூசி போடாமல் இருப்பவர்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி
இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னையில் இதுவரை 17,58,187 முதல் டோஸ் தடுப்பூசி, 6,04,804 இரண்டாம் டோஸ் தடுப்பூசி என, மொத்தம் 23,62,991 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்த தரவுகளை ஆய்வு செய்தபோது மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டிய காலத்தைக் கடந்து சுமார் 89,500 நபர்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

இரண்டாம் டோஸ்
இதையடுத்து மாநகராட்சி சார்பில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தத் தவறிய நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்கள் உடனடியாக இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, இதுவரை 30,480 நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இருப்பினும் இன்னும் சுமார் 59 ஆயிரம் பேர் இரண்டாம் டோஸ் வேக்சின் எடுத்துக் கொள்ளாமல் உள்ளனர்.

சிறப்பு முகாம்கள்
இவர்கள் கோவாக்சின் இரண்டாம் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் வகையில் 23.06.2021 மற்றும் 24.06.2021 ஆகிய இரு நாட்களுக்கு மாநகராட்சியின் அனைத்துத் தடுப்பூசி மையங்களிலும் கோவாக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளச் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கோவக்சின் டோஸ்கள் அனைத்து தடுப்பூசி முகாம்களுக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது தடுப்பூசி முகாம்கள் குறித்த தகவல்களை http://covid19.chennaicorporation.gov.in/covid/vaccine_centers/ என்ற தளத்தில் தெரிந்து கொள்ளலாம்" எனக் கூறப்பட்டுள்ளது












Click it and Unblock the Notifications