செந்தில் பாலாஜிக்கு ஜாமின் தர முடியாது.. அதிரடியாக தீர்ப்பளித்த நீதிபதி அல்லி சொன்ன காரணங்கள்
சென்னை: செந்தில் பாலாஜியை ஜாமினில் விடுவிக்கப்படும் போது, அவர் எந்த குற்றத்தையும் செய்ய வாய்ப்பில்லை என்றோ நம்புவதற்கு, நீதிமன்றம் போதிய காரணங்களை கண்டறியவில்லை என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி கூறியுள்ளார். தகுதி மற்றும் மருத்துவ காரணங்களுக்காக, மனுதாரருக்கு ஜாமின் வழங்க முடியாது எனவும் நீதிபதி அல்லி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி பணம் வாங்கிய குற்றச்சாட்டில் சட்ட விரோத பணபரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக கூறி அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்தனர். செந்தில் பாலாஜிக்கு வரும் 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. 6வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை கடந்த 15ஆம் தேதி நடைபெற்றது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி மனுவை விசாரித்தார். அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதங்களை முன்வைத்தார்.
"செந்தில் பாலாஜி மீது கூறப்பட்டுள்ள சட்ட விரோத பண பரிமாற்ற குற்றச்சாட்டு 9 ஆண்டுகள் முன்பானது. சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. இந்த ஒன்பது ஆண்டுகளில் வருமான வரியை தாக்கல் செய்துள்ளேன். சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்திருந்தால் வருமான வரி செலுத்தியது எப்படி ஏற்கப்பட்டிருக்கும்?. வழக்கு பதியப்பட்ட ஆண்டிலிருந்து தற்போது வரை வருமான வரி செலுத்தியது வருமான வரித்துறையால் ஏற்கப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக பண பரிமாற்றம் நடந்ததாக எந்த சாட்சிகளும் கூறவில்லை " என வாதிட்டார்.
அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் வாதங்களை முன்வைத்தார். தனது தரப்பு வாதத்தில் சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்ததற்கான முகாந்திரம் உள்ளதால் தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. செந்தில் பாலாஜி மீதான வழக்கு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்ற வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்துள்ளது.
இந்த முறைகேடு இடைத்தாரர்கள் மூலம் நடந்துள்ளது. பணம் கொடுத்த சிலருக்கு வேலை கிடைத்துள்ளது. சிலருக்கு வேலை கிடைக்கவில்லை. வருமான வரி கணக்கை வருமான வரித்துறை ஏற்றுக்கொண்டதாலேயே அது சட்டப்பூர்வமான பணம் ஆகாது என்ற தீர்ப்புகள் உள்ளன. வருமான வரி கணக்கு ஏற்றுக்கொள்ப்பட்டதால் தவறு செய்யவில்லை என்றில்லை. விசாரணையில் தான் அது தெரியவரும். குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர் தான், தன் மீதான குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி தாம் தவறு செய்யவில்லை நிரூபிக்க வேண்டும்
வேலை வேண்டும் எனக்கோரி பணம் கொடுப்பவர்கள் வங்கி மூலம் பணம் கொடுக்கமாட்டார்கள். அமலாக்கத்துறை விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் ஜாமின் வேண்டும் என கோர முடியாது. ஐபிசி வழக்குகளுக்கு வேண்டுமானால் அது பொருந்தும். அமலாக்கத்துறை சட்டம் வேறு.
அமைச்சர் செந்தில் பாலாஜி இன்னும் அமைச்சராக இருக்கிறார். சமூகத்தில் சக்தி வாய்ந்த நபராக உள்ளார். எனவே சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது. ஜாமின் வழங்க கூடாது ஜாமின் கோருவதற்கு உடல் நிலை ஒரு காரணம் அல்ல. அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் இரண்டரை ஆண்டுகளாக சிறையில் உள்ளவர்களும் உள்ளனர். செந்தில் பாலாஜியின் எலக்ட்ரானிக் பொருட்களை சட்ட விரோதமாக வைத்திருந்ததாக கூறுவது தவறு. ஆவணங்களை சேகரிக்கும் நோக்கிலேயே எலக்ட்ரானிக் பொருட்களை அமலாக்கத்துறையால் கைப்பற்றப்பட்டது. எனவே செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி செப்டம்பர் 20ஆம் தேதியான புதன்கிழமை தீர்ப்பளித்தார். ஜாமின் மனுவை தள்ளுபடி செய்வதாக கூறிய நீதிபதி அதற்கான காரணங்களையும் குறிப்பிட்டார்.
நீதிபதி எஸ்.அல்லி தனது உத்தரவில், ஜூன் 14ல் கைதானபோது ஜாமின் கேட்டு ஏற்கனவே தாக்கல் செய்த மனு, ஜூன் 16ல் இதே நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. அமலாக்கத் துறை விசாரணை முடிக்கப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளதை தவிர, வேறு எந்த மாற்றமும் ஏற்படவில்லை என நீதிமன்றம் கருதுகிறது.
சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டம் பிரிவு 45 படி, கைது செய்யப்பட்டவர் ஜாமின் கோரி வழக்கு தொடர்ந்தால், முதலில் அமலாக்கத்துறை தரப்பு வாதத்திற்கு வாய்ப்பு வழங்க வேண்டும். இரண்டாவது, கைது செய்யப்பட்டவர் குற்றம் புரியவில்லை என்பதையும் ஜாமினில் வெளியே வந்தால் மீண்டும் குற்றம் புரிய மாட்டார் என்பதையும் நீதிமன்றம் ஏற்க வேண்டும்.
ஆனால், பிரதான வழக்கு விசாரணையின் போது தான் செந்தில் பாலாஜி குற்றம் புரிந்தாரா? இல்லையா? என்பது தெரிய வரும் என செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளதால், செந்தில் பாலாஜி குற்றம் புரியவில்லை என்பது இந்த சூழலில் நிரூபிக்கப்படவில்லை.
செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ.,வாகவும், தமிழக அரசின் தற்போதைய அமைச்சராகவும் உள்ளார். ஏற்கனவே போக்குவரத்து, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் கலால் போன்ற முக்கிய துறைகளை வகித்துள்ளார். செல்வாக்கு மிக்கவர் என்பதால், சாட்சிகளை கலைக்கவோ, ஆவணங்களை திருத்தவோ வாய்ப்புள்ளது என்ற அடிப்படையில், ஜாமின் வழங்க, அமலாக்கத்துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மனுதாரருக்கு எதிராக உள்ள ஆதாரங்கள் மற்றும் குற்றத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டும், மனுதாரர் குற்றத்தில் ஈடுபடவில்லை என்றோ அல்லது ஜாமினில் விடுவிக்கப்படும் போது, அவர் எந்த குற்றத்தையும் செய்ய வாய்ப்பில்லை என்றோ நம்புவதற்கு, நீதிமன்றம் போதிய காரணங்களை கண்டறியவில்லை. எனவே, தகுதி மற்றும் மருத்துவ காரணங்களுக்காக, மனுதாரருக்கு ஜாமின் வழங்க முடியாது. செந்தில்பாலாஜியின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி அல்லி அதிரடியாக உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications