சசிகலாவை அதிமுகவிலிருந்து நீக்கியது செல்லும்.. சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா உரிமை கோரியதை எதிர்த்து ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த வழக்கில் சசிகலாவை அதிமுகவிலிருந்து நீக்கியது செல்லும் என தீர்ப்பு வழங்கிய சென்னை உரிமையியல் நீதிமன்றம் சசிகலாவின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
அதிமுக பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 29ஆம் தேதி கட்சியின் பொது செயலாளராக வி.கே.சசிகலாவையும், துணை பொது செயலாளராக டி.டி.வி.தினகரனை தேர்ந்தெடுத்துள்ளதாக அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டது.
அதன்பின்னர் சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்தனர்.

பொதுச் செயலாளர்
பொது செயலாளர் மூலமாக இல்லாமல் கூட்டபட்ட பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரியும், அதில் தங்களை நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக் கோரியும் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோர் சென்னை மாவட்ட 4வது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

ஓபிஎஸ்- எடப்பாடி பழனிச்சாமி
தன்னை பொதுச் செயலாளராக அறிவித்து 2016 டிசம்பர் 29ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கட்சி உறுப்பினர்கள் என்ற முறையில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரையும் கட்டுப்படுத்தும் எனவும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியது சட்டவிரோதம் எனவும் அறிவிக்க வேண்டுமென சசிகலா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

அதிமுக நிர்வாகிகள்
இருவரின் வழக்குகளையும் வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக நிர்வாகிகள் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சசிகலா கட்சியிலிருந்தே நீக்கம் செய்யப்பட்டு, அதனை உச்சநீதிமன்றமும்,டெல்லி உயர்நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் ஏற்றுக் கொண்ட நிலையில், தன்னை அதிமுக பொதுச்செயலாளர் என சசிகலா தவறான தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

ஏற்புடையதல்ல
அதிமுகவின் முகங்களாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதாகவும், சசிகலா அதிமுகவிலேயே இல்லை என்கிறபோது கட்சியின் உறுப்பினர்கள் விபரம், சொத்து,வைப்பு நிதி, தலைமை அலுவலகத்தின் சாவி ஆகியவற்றை தன்னிடம் ஒப்படைக்கும் படி கோருவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அமமுக
இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை உருவாக்கி நடத்தி வருவதால், இந்த வழக்கிலிருந்து விலகி கொள்வதாக அதன் பொது செயலாளரான டிடிவி.தினகரன் தரப்பில் மனுத்தாகல் செய்யப்பட்டது. இதையடுத்து கட்சியில் பொது செயலாளர் உரிமை கோரும் சசிகலா வழக்கை மட்டும் நீதிமன்றம் விசாரித்த நிலையில், அவரது வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அதிமுகவிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்
இந்த நிராகரிப்பு மனுக்களில் சென்னை மாவட்ட 4வது கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஜெ. ஸ்ரீதேவி இன்று தீர்ப்பளித்தார். அப்போது சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கி அதிமுக பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றியது செல்லும் என கூறிய நீதிபதி, சசிகலாவின் மனுவை தள்ளுபடி செய்தார். அதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மட்டும் இணைப்பாளர் உள்ளிட்ட நிர்வாகிகளின் மனுக்களை ஏற்பதாகவும் சசிகலா தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்வதாகவும் சசிகலாவை அதிமுகவிலிருந்து நீக்கியது செல்லும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications