நெற்றியில் தீபாவுக்கு காயம்..பள்ளத்தில் அரைமணி நேரம் துடித்த உயிர்! போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் பரபர
சென்னை: சென்னை சூளைமேட்டில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் தீபா என்ற பெண் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தின் அதிர்ச்சி இன்னும் விலகவில்லை.. மூடப்படாமல் இருந்த மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார் தீபா.. இவரது போஸ்ட் மார்ட்டம் தற்போது வெளியாகி, மிகப்பெரிய அதிர்வலையை சென்னைவாசிகளுக்கு உண்டுபண்ணி வருகிறது. தீபாவை கொலை செய்திருப்பார்களோ? என்று சில சந்தேகங்கள் இணையத்தில் பரவிய நிலையில், தற்போது தீபாவின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டும் வெளியாகியிருக்கிறது. என்ன நடந்தது தீபாவுக்கு?
நேற்று காலை 8 மணி அளவில் ஆவடி பொதுமக்கள் தற்செயலாக அந்த பள்ளத்தில் பார்த்தபோதுதான், 40 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உருவம் தென்பட்டுள்ளது. இதனால் பதறிப்போன மக்கள், அப்பெண்ணை மேலே தூக்கி பார்த்தபோது, தலையில் பலத்த காயமடைந்து சுயநினைவின்றி இருந்துள்ளார்..

சூளைமேடு போலீஸ்
உடனே 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சோதனை செய்தபோது, பெண் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்துவிட்டனர். தகவலறிந்து வந்த சூளைமேடு போலீசார், பெண்ணின் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, பெண்ணை பற்றின தகவலை சேகரித்தனர்.
அப்போதுதான் உயிரிழந்தவர், கோடம்பாக்கத்தை சேர்ந்த 41 வயது தீபா என்பது தெரியவந்தது. இவரது கணவர் ஜெகன். இவர்களுக்கு 20 வயது மகள் உள்ளார்.
வ்டிகால் வண்டல் வடிதொட்டி
இதனிடையே, தீபாவின் மரணம் பலவிதமான சந்தேகங்களை கிளப்பியது.. மழைநீர் வடிகாலின் வண்டல் வடிதொட்டிக்குள், நைட்டியுடன் தலைகீழாக தீபாவின் பிணம் கிடந்துள்ளது.. அவரது கைகள் கட்டப்பட்டிருந்தன.. தீபாவின் நெற்றியிலும், உதட்டிலும் காயம் இருந்துள்ளது.. சிறிய அளவிலான வண்டல் வடி தொட்டிக்குள் யாரும் தவறி விழ வாய்ப்புமில்லை.. தலைகுப்புற விழுந்தாலும் தொட்டிக்குள் தலை செல்லும் வகையில் துல்லியமாக விழவும் முடியாது.
எனவே, மர்ம நபர்கள் கொலை செய்து, தொட்டியில் தலைகீழாக பெண்ணின் உடலை மறைத்திருக்கலாம் அல்லது பெண்ணில் தலையில் தொட்டிக்குள் நுழைத்து கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசாரின் விசாரணையும் ஆரம்பமானது.
பாஜக அண்ணாமலை
இதனிடையே, பாஜக அண்ணாமலையும் இதுகுறித்து கேள்வி எழுப்பினார்.. இறந்த பெண்ணின் வாய் மற்றும் கைகள் கட்டப்பட்டிருந்தன.. அந்தப் புகைப்படங்களை பார்த்தால், அவரது துப்பட்டா, கையில் சிக்கியிருப்பது போலத் தான் தெரிகிறதே தவிர, கட்டப்பட்டது போலத் தெரியவில்லையே என்று கூடுதல் சந்தேகத்தை கிளப்பியிருந்தார்.
இதையடுத்து, இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.. அதில், வடிகாலில் விழுந்து தலையில் அடிபட்டே தீபாவின் உயிர் பிரிந்துள்ளதாக சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது..
கொலை செய்யப்பட்டாரா?
அதேபோல, தீபாவை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகங்கள் வலுத்த நிலையில், தீபாவின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டும் நடந்து முடிந்து, அதுகுறித்த தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.. அதாவது நள்ளிரவு 12.30 மணிக்கு தீபா நடந்து செல்லும்போதுதான், இந்த பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார்.. இதில் தீபாவின் நெற்றிப்பொட்டியில் காயம் ஏற்பட்டு, அதன் காரணமாக அவரது உயிர் பிரிந்துள்ளது தெரியவந்துள்ளது..
இரவு 12.30 மணிக்கு தீபா நடந்து செல்லும்போது, மழைநீரில் ஊறியிருந்த மட்டப்பலகை மீது கால் வைத்துள்ளார்.. அப்போது அந்த பலகை உடைந்துவிடவும், தீபா பள்ளத்தில் விழுந்து, நெற்றிப்பொட்டிலும் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அரை மணி நேரம் உயிருக்கு போராடியிருக்கிறார்.. இறுதியில் 1 மணி அளவில் தீபாவின் உயிர் பிரிந்துள்ளது என்று போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் தெரியவந்துள்ளது.
எங்குமே காயம் இல்லை
அதேபோல, தீபாவின் உடலில் வேறு எங்கும் காயம் இல்லை என்பதும், இதனால் அவர் கொலை செய்யப்படவில்லை என்பதும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் உறுதியாகியிருக்கிறது... பிரேத பரிசோதனை முடிந்து, தீபாவின் சடலம் அவரது தாயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.. இதனிடையே, மழைநீர் வடிகால் அமைப்பவர்களின் அலட்சியத்தால் குழிக்குள் விழுந்து தீபா உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications