பூனைக் குட்டி வெளியே வந்துருச்சு! ஜெயில்ல போட்றுவோம்.. நடிகை, நடிகர்களிடம் பணத்தை கறந்த போலீஸ்!
சென்னை: அதிமுக முன்னாள் நிர்வாகியிடம் இருந்து போதை பொருள் வாங்கி பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் ஜாமினில் வெளி வந்துள்ளனர். இந்நிலையில், போதைப் பொருள் வழக்கில் நடிகர் நடிகைகளை கைது செய்யாமல் இருக்க 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் காவல் ஆய்வாளரும், இரண்டு சார்பு ஆய்வாளர்களும் சிக்கி இருக்கின்றனர். அவர் மூவரும் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டு இருக்கும் நிலையில் லஞ்சம் கொடுத்த சினிமா பிரபலங்கள் யார்?என விசாரணை பெற்று வருகிறது.
போதைப் பொருள் வழக்கு தொடர்பாக பிரதீப் என்பவரை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு முன்னாள் பிரமுகர் ஆன பிரசாத் என்பவரிடம் போதை பொருள் வாங்கியதாக கூறினார்.
இதை அடுத்து பிரசாத்தை கைது செய்த நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் பல திரைப்பட நடிகர்கள் போதைப்பொருள் வாங்கியதாக சொல்லப்பட்ட நிலையில் நடிகர் ஸ்ரீகாந்துக்கு 40 முறை போதை பொருளை விற்றதாக கூறினார்.

இதை அடுத்து ஸ்ரீகாந்தை அழைத்து வந்த போலீசார் அவரது ரத்த மாதிரிகளை சோதனைக்காக அனுப்பினார். அதில் ஸ்ரீகாந்த் போதை பொருள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். மேலும், போதை பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்த நடிகர்கள் யார் யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. இதை அடுத்து கழுகு படத்தின் மூலம் பிரபலமான நடிகர் கிருஷ்ணா மீதும் போலீசாரின் பார்வை விழுந்தது.
அவர் தலைமறைவாக இருந்ததாக சொல்லப்பட்ட நிலையில் அவராகவே விசாரணைக்கு ஆஜரானார். முன்னதாக அவரை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதர்கிடையே நுங்கம்பாக்கம் அசிஸ்டன்ட் கமிஷனர் முன்னிலையில் நடிகர் கிருஷ்ணா தனது வழக்கறிஞர்களுடன் ஆஜர் ஆனார். இதை அடுத்து கிருஷ்ணாவிடம் போலீசார் 15 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்திய நிலையில் அவரும் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து அவர்களுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில் இருவரும் புழல் சிறையிலிருந்து வெளி வந்தனர். இதற்கு இடையே போதைப் பொருள் வழக்கில் பிரபல நடிகர், நடிகைகள் மற்றும் சினிமா பிரபலங்களுக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பல நடிகர் நடிகைகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் போதைப் பொருள் வழக்கில் விசாரணைக்கு ஆஜரான, நடிகர் நடிகையிடம் பணம் தர வேண்டும் இல்லை என்றால் சிறையில் அடைத்து அதை செய்தியாக வெளியிடுவோம் என கூறியதாக சொல்லப்படுகிறது. போலீசாரின் இந்த மிரட்டலுக்கு பயந்த பல சினிமா பிரபலங்கள் லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இதுவரை 50 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் கைமாறியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக தகவல் அறிந்த சென்னை காவல் ஆணையர் அருண் இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார். திருவல்லிக்கேணி குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் சுதாகர், உதவி ஆய்வாளர் நுங்கம்பாக்கம் ராமகிருஷ்ணன், ஆயிரம் விளக்கு அருண்மணி ஆகியோர் லஞ்சம் பெற்றதாக தெரியவந்தது. இதை அடுத்து அவர்கள் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டு இருக்கின்றனர்.
அவர்கள் மீது துரை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், அவரவர் வங்கி கணக்குகளிலும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த புகாரியில் மேலும் பல போலீசார் சிக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், லஞ்சம் கொடுத்த நடிகர் நடிகைகள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications