கோடை விடுமுறை வந்தாச்சு! நாகர்கோவிலுக்கு செல்ல பிளானா? வந்தே பாரத் சிறப்பு ரயிலை பாருங்க
சென்னை: சென்னை எழும்பூர் டூ நாகர்கோவில் வரை செல்லும் வந்தே பாரத் சிறப்பு ரயில் நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை எழும்பூரில் இருந்து வரும் மே 2, 9, 16, 23, 30 மற்றும் ஜூன் 6,13, 20, 27 ஆகிய தேதிகளில் வியாழக்கிழமைகளில் காலை 5.15 மணிக்கு புறப்பட்டு செல்லும் வாராந்திர வந்தே பாரத் சிறப்பு ரயில் (ரயில் எண் 06067) அதே நாளில் மதியம் 2.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

மறுமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்படும் வாராந்திர வந்தே பாரத் சிறப்பு ரயில் (06068) அதே நாள் இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். அது போல் சென்னை எழும்பூரில் இருந்து மே 3, 4, 5, 10, 11, 12, 17,18, 19, 24, 25, 26, 31 ஆகிய தேதிகளிலும் ஜூன் 1, 2, 7, 8, 9, 14, 15, 16, 21, 22, 23, 28, 29, 30 ஆகிய தேதிகளிலும் அதாவது வெள்ளி, சனி, ஞாயிறுகளில் காலை 5.15 மணிக்கு புறப்படும் சிறப்பு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் (06057) அதே நாள் மதியம் 2.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
அது போல் மறுமார்க்கமாக இதே தேகளில் நாகர்கோவிலிருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு வரும் வந்தே பாரத் (06058) அதே நாள் இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். இந்த ரயில் வாரத்தில் 3 தினங்கள் மட்டுமே இயக்கப்படும். அதன்படி சென்னை எழும்பூர்- நாகர்கோவில் வாராந்திர வந்தே பாரத் ரயில் 9 டிரிப்புகளும் வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும் ரயில் 27 டிரிப்புகளும் செல்லும்.
அதே வேளையில் ரயில்களின் நேரம், நிறுத்தங்களில் எந்த வித மாற்றமும் இல்லை என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த ரயில்கள் எங்கெல்லாம் நிற்கும் தெரியுமா? சென்னை எழும்பூர், தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய மார்க்கங்களில் நின்று செல்லும்.

வந்தே பாரத் ரயில்கள் தமிழகத்தில் ஐசிஎஃப்பில் தயாராகி வருகிறது. இந்த ரயில்கள் முற்றிலும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டது. இதன் வேகம் அதிகம் என்பதால் பயண நேரமும் குறைவு. ஆனால் டிக்கெட் கட்டணம் சற்று அதிகம்தான். எனினும் மக்கள் இந்த ரயில்களில் பயணிக்க விரும்புகிறார்கள்.
இந்த ரயிலில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகமாகவே இருக்கிறது. ஜிபிஎஸ் டிராக்கிங் சிஸ்டம் என இருப்பதால் இந்த ரயில்கள் பயணிகளிடையே வரவேற்பை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications