Chennai: ரயில்களில் நண்பர்களுக்கு இடம் பிடிச்சு வைப்பீங்களா! இனி இதை செய்தால் அவ்வளவு தான்.. தெற்கு ரயில்வே வார்னிங்
சென்னை: மின்சார (Chennai Electric Train) ரயில்களில் உள்ள இருக்கைகள், 'முதலில் வருபவருக்கே முன்னுரிமை' என்ற அடிப்படையில் மட்டுமே நிரப்பப்பட வேண்டும். மற்றவர்களுக்காக இடம் பிடிப்பதும், இருக்கைகள் மீது கால்களை வைப்பதும் ரயில்வே விதிகளின்படி தண்டனைக்குரிய குற்றமாகும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. எனவே இதுபோன்ற செயல்களை பயணிகள் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் பயணிகளின் உயிர்நாடியாக இருப்பது ரயில்வேதான். தொலைதூர பயணங்கள் என்றாலும் சரி, குறுகிய தூர பயணம் என்றாலும் சரி, ரயில்கள் இருந்தால் முதலில் ரயில்களில் செல்வதைத்தான் பயணிகள் விரும்புவார்கள். ரயிலில் டிக்கெட் இல்லை என்றால் மட்டுமே பேருந்துகளிலோ, கார்களிலோ செல்லலாமா என யோசிப்பார்கள்.

சென்னை மின்சார ரயில் சேவை
குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களில் மின்சார ரயில் போக்குவரத்து மிக முக்கியமானதாக உள்ளது. சென்னையில் சென்னை பீச் - தாம்பரம், செங்கல்பட்டு மிக முக்கியமான வழித்தடமாகும். இது போக ஆவடி, வேளச்சேரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட ரூட்டுகளில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டாலும் பீச் - தாம்பரம் ரூட்டில் பயணிகள் கூட்டம் எப்போதும் அலைமோதுவதை காண முடியும். பீக் நேரங்களில் நிற்க கூட முடியாத அளவிற்கு பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.
புறநகர் மின்சார ரயில்களை பொறுத்தவரை, சில நேரங்களில் பயணிகள் அடுத்த ஸ்டாப்பில் வரும் தங்கள் நண்பர்களுக்காக ரயிலில் இடம் பிடித்து வைப்பதை பார்க்க முடிகிறது. அதுபோல் சில பயணிகள் தங்கள் இருக்கைக்கு எதிர் இருக்கையில் உள்ள சீட்டில் கால் வைத்துக்கொண்டும் பயணிப்பார்கள். சில பயணிகளின் இத்தகைய செயல்கள் சக பயணிகளுக்கு அசவுகரியமான சூழலை ஏற்படுத்துகின்றன.
முன்கூட்டியே இடம் பிடித்து வைக்கக் கூடாது
இது தொடர்பாக பயணிகள் இடையே அவ்வப்போது ரயிலில் வாக்குவாதம் நடைபெறுவதை பார்க்க முடிகிறது. இந்த நிலையில்தான், இதுபோன்ற பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தெற்கு ரயில்வே முக்கியமான அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதாவது, ரயிலில் பயணிகள் தங்கள் நண்பர்கள், தெரிந்தவர்களுக்கு முன்கூட்டியே இடம் பிடித்து வைக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே தரப்பில் கூறப்பட்டதாவது:-
முதலில் வருபவருக்கே முன்னுரிமை
"சென்னை மின்சார ரயில்களில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். ரயிலில் சில பயணிகள், சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதாக அடிக்கடி புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. அதன்படி, ரயில்கள் நிற்பதற்கு முன்பே இடம் பிடிப்பதற்காக சிலர் ஓடும் ரயிலில் ஏறுவது, ரயில் பெட்டிகளின் நுழைவாயிலில் அமர்ந்து, மற்ற பயணிகள் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் இடையூறாக இருப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இதுபோன்ற செயல்களால் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள நேரங்களில் பயணிகளுக்கு கடும் இடையூறாக உள்ளது. மேலும், மின்சார ரயில்களில் உள்ள இருக்கைகள், 'முதலில் வருபவருக்கே முன்னுரிமை' என்ற அடிப்படையில் மட்டுமே நிரப்பப்பட வேண்டும். மற்றவர்களுக்காக இடம் பிடிப்பதும், இருக்கைகள் மீது கால்களை வைப்பதும் ரயில்வே விதிகளின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்" எனத் தெரிவித்துள்ளது.
பயணிகள் தொடர் கோரிக்கை
இதற்கிடையே, புறநகர் மின்சார ரயில்களில் போலீசார் ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தியுள்ளனர். குறிப்பாக இரவு நேர பயணங்களின் போது, பெரும்பாலான ரயில்களில் கூட்டம் குறைவாக இருக்கும் நிலையில், பயணிகள் போல ஏறி சில சமூக விரோதிகள் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வது போன்ற போக்கு இருப்பதால், இரவு நேர பயணத்தில் ரயில்வே போலீசார் அடிக்கடி கண்காணித்து, இவ்வாறான நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.












Click it and Unblock the Notifications