2015 vs 2023 வெள்ளம்! மீட்பு பணிகளில் வேகம் காட்டியது திமுக அரசா அதிமுக அரசா? மக்கள் சொல்வது என்ன
சென்னை: புயல், வெள்ள பாதிப்பு மீட்புப் பணிகளைக் குறைந்த நாட்களில் செய்து வேகம் காட்டியதில் திமுக அரசு சிறந்ததா இல்லை அதிமுக அரசு சிறந்ததா என்பது குறித்த கேள்விக்கு மக்கள் அளித்துள்ள பதிலை நாம் பார்க்கலாம்.
வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் கரையைக் கடப்பதற்குள் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைப் புரட்டிப் போட்டுவிட்டது. ஞாயிறு இரவு தொடங்கிய கனமழை செவ்வாய் அதிகாலை வரை தொடர்ந்தது.

இதனால் ஒட்டுமொத்த சென்னையும் மொத்தமாக நீரில் மூழ்கியது. ஒட்டுமொத்த சென்னையும் முடங்கிய நிலையில், சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
வெள்ள பாதிப்புகள்: சென்னையைப் பொறுத்தவரை இங்கே மழையால் ஏற்படும் பாதிப்புகள் என்பது ஒன்றும் புதியது இல்லை.. சென்னைவாசிகள் சாரல் மழையை மகிழ்ச்சியுடன் என்ஜாய் செய்தாலும் மழை சற்று நேரம் தொடர்ந்து பெய்தால் அவர்களுக்கே அச்சம் ஏற்பட்டுவிட்டும். ஏனென்றால் கொஞ்ச நேரம் தொடர்ந்து மழை பெய்தாலும் நிச்சயம் சாலைகளில் நீர் தேங்கும் என்பது அவர்களுக்குத் தெரியும்.
கடந்த காலங்களில் மழை பெய்தால் சென்னையின் முக்கிய சாலைகள் நீரில் மூழ்குவதை நாம் பார்த்துள்ளோம். நிவர், கஜா என ஒவ்வொரு சமயமும் புயல் வரும்போதும் மோசமான பாதிப்புகள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இதன் காரணமாகவே மழை என்றாலே சென்னை மக்கள் அலறும் சூழல் இருந்தது. அதிலும் குறிப்பாகக் கடந்த 2015இல் ஏற்பட்ட பெருவெள்ளத்தை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துவிட மாட்டார்கள்.
2015 பெருவெள்ளம்: மழை தொடர்ந்து பெய்த நிலையில், திடீரென ஒரு நாள் இரவு நீர் மட்டம் அதிகரிக்க ஆரம்பித்தது. கொஞ்ச நேரத்தில் நீர் வடிந்துவிடும் என்ற நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தொடர்ந்து அதிகரித்த மழை நீர் அளவு அதிகரித்த நிலையில், ஒரு கட்டத்தில் நிலைமை கையை மீறிச் செல்லும் அளவுக்கு மோசமானது. தன்னார்வலர்கள் தொடங்கி பலரும் அப்போது களத்தில் இறங்கி வேலை செய்தனர்.
அதேபோல புயலுக்குப் பிறகு அரசு இயந்திரமும் முழு வீச்சில் இறங்கி வேலை செய்தனர். அப்போது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு இருந்த நிலையில், மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டது. அதிகாரிகளும் முழு வீச்சில் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். நீரை வெளியேற்றுவது, உணவுகளை வழங்குவது போன்ற பணிகளைத் தன்னார்வலர்கள் மேற்கொண்டனர். இருப்பினும், நிலைமை நார்மல் ஆகவே பல நாட்கள் வரை ஆனது.
2023 மிக்ஜாம் புயல்: ஆனால், இதெல்லாம் கடந்த காலங்களில் கடந்தவை மீண்டும் இதுபோல நடக்காது என்று மக்கள் எண்ணிக் கொண்டிருந்த நிலையில், அதை இந்த மழை புரட்டிப் போட்டது. கடந்த ஞாயிறு முதல் இரண்டு நாட்களுக்கு வரலாறு காணாத மழை சென்னையில் கொட்டிய நிலையில், மொத்தமாகச் சென்னை ஸ்தம்பித்தது. குறிப்பிட்ட பகுதி என்று இல்லாமல் ஒட்டுமொத்த நகரம் மூழ்கியது.
இந்த முறை மழை விட்ட பிறகு அமைச்சர்கள் களத்தில் இருந்தனர். மழை நின்றவுடன் உதயநிதி, மா.சு, சேகர்பாபு, கே.என்.நேரு, கேகேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், டிஆர்பி ராஜா, தங்கம் தென்னரசு, மனோ தங்கராஜ் எனப் பலரும் களத்தில் இறங்கி மீட்புப் பணிகளைக் கவனித்தனர். குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் மீட்புப் பணிகளைப் பார்வையிட்டார். விரைவில் நீர் அகற்றப்பட்டு பழைய சென்னை திரும்பும் என உறுதியளித்தனர்.
மக்கள் சொல்வது என்ன: முக்கிய சாலைகளில் நீர் வடிந்துவிட்ட போதிலும், இன்னுமே உட்புற சாலைகளில் நீர் தேங்கியே இருக்கிறது. சில இடங்களில் கரண்ட் இல்லை, உணவு பிரட் தரவில்லை, நீர் தேங்கியுள்ளது என மக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அதேபோல இணையத்திலும் கூட திமுக செயல்பாடுகளை விமர்சித்தும் பாராட்டியும் பல ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகின.
இதற்கிடையே புயல், வெள்ள பாதிப்பு மீட்புப் பணிகளைக் குறைந்த நாட்களில் செய்து வேகம் காட்டியது எந்த அரசு? என்று எக்ஸ் தளத்தில் நாங்கள் பொதுமக்களிடையே சர்வே ஒன்றை நடத்தி இருந்தோம். அதில் சுமார் 64.7% மக்கள் திமுக அரசே வெள்ள பாதிப்பு பணிகளை விரைவாக மேற்கொண்டதாகத் தெரிவித்தனர். 35.3% மக்கள் மட்டுமே அதிமுக அரசு சிறப்பாகக் கையாண்டதாகத் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications