Exclusive: கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஸ்டாலின் முதல்முறையாக ஏற்றும் கொடி தயார்!
சென்னை: சுதந்திர தினத்தன்று சென்னை கோட்டை கொத்தளத்தில் பறக்க விடுவதற்காக சென்னையில் தேசியக் கொடியானது தயார் நிலையில் உள்ளது. இந்த கொடியைத்தான் முதல்வர் ஸ்டாலின் முதல்முறையாக ஏற்ற போகிறார்.
நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் வரும் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், தலைமைச் செயலகங்கள், செங்கோட்டை, காவல் துறை அலுவலகங்கள், ஆட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சிகள், நகராட்சிகள் என பல இடங்களில் கொடிகளை ஏற்றுவர்.
அது போல் அண்மைக்காலங்களாக அடுக்குமாடி குடியிருப்புகளிலும் கூட கொடிகள் ஏற்றப்படுகிறது. தமிழகத்தில் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் தேசியக் கொடியை ஏற்றுவார். அதற்கான கொடி சென்னை காதி கிராமோத்யாக் பவனில் தயாராகி தலைமை செயலகத்திற்கு அனுப்பப்பட்டுவிட்டது.

காதியில் ஐஎஸ்ஐ சான்று
பொதுவாக மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், நிறுவனங்களில் காதியில் தயாரிக்கப்பட்ட ஐஎஸ்ஐ சான்று பெற்ற தேசியக் கொடிகளையே ஏற்ற வேண்டும். தேசியக் கொடிகள் மகாராஷ்டிரா மாநிலம் நான்டெக் மரத்துவாடாவில் மத்திய அரசின் காதி கிராமோத்யாக் பவனில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.

மகாராஷ்டிரா
அந்த வகையில் ஆயிரக்கணக்கான கொடிகள் மகாராஷ்டிராவிலிருந்து வரவழைக்கப்படுகிறது. அவை சென்னையில் தயார் செய்யப்படுகிறது. இதுகுறித்து சென்னை கிராமோத்யாக் பவனில் இருந்து கோட்டை கொத்தளத்திற்கான கொடி தயார் செய்யப்பட்டுவிட்டது. இங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு தேசியக் கொடிகள் செல்கின்றன. அது போல் பெரிய தலைவர்கள் இறந்துவிட்டாலும் இந்த கிராமோத்யாக் கொடியைத்தான் போர்த்துவார்கள்.

10 நாட்களுக்கு முன்னர் ஆர்டர்
இது அரசு ஏற்று நடத்துவதால் இந்த கொடி இங்கு மட்டும்தான் கிடைக்கும். வேறெங்கும் கிடைக்காது. சென்னையில் அண்ணா சாலையிலும் கோபாலபுரத்திலும் கிளைகள் உள்ளன. காதி கிராப்ட் வேறு , காதி கிராமோத்யாக் வேறு. எங்களுடையது அரசு ஏற்று நடத்துவது. சுதந்திர தினத்தின்று கொடியேற்ற 10 நாட்களுக்கு முன்னர் ஆர்டர் கொடுப்பார்கள். இங்கிருந்து காவல் துறை, மாவட்ட நிர்வாகம் உள்ளிட்டவற்றுக்கு செல்லும்.

300 முதல் 500 கொடிகள்
இந்த ஆண்டு மட்டும் 5000 கொடிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. காவல் துறைக்கு மட்டுமே 300 அல்லது 500 கொடிகள் அனுப்பப்படும். மதுரை, திருச்சி, கோவை சிறைகளில் ஏற்றுவதற்கும் இங்கிருந்துதான் கொடி அனுப்பப்படுகிறது. இந்த கொடிகள்தான் கோட்டை கொத்தளம் முதல் அனைத்து மத்திய மாநில அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள் உள்ளிட்டவை துறை வாரியாக கடிதம் எழுதி கொடுத்து ஆர்டர் கொடுப்பார்கள்.

முதல்வர் ஏற்றுதல்
கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஏற்றுவதற்கான கொடியை தலைமை செயலக அதிகாரிகள் வாங்கி சென்றுவிட்டார்கள் என்றார். கோட்டை கொத்தளத்தில் 138 அடி உயரத்திற்கு கொடிக் கம்பம் அமைக்கப்பட்டு தினமும் இங்கு கொடி ஏற்றப்படுகிறது. பஞ்சாப் மாநிலம் வாகா எல்லையில்தான் 360 அடி உயரம் கொடி பறக்கிறது. தேசியக் கொடியை அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது கர்நாடகா.

தேசியக் கொடி
சுமார் 40 ஆண்டுகளாக தேசியக் கொடியை மாநில தலைமைச் செயலகங்கள், மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பப்படுகிறது. கொடிகள் மொத்தம் 9 சைஸ்களில் உள்ளன. அதில் மிகச் சிறியது 0.5 -க்கு 0.3 , மிகப் பெரியது 21 க்கு 14 ஆகும். இந்தியாவில் தேசியக் கொடிகள் காதி கிராமோத்யாக்கில் மட்டுமே தயார் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும் என இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் உத்தரவிட்டிருந்தார். கடந்த 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஏற்றப்பட்ட தேசியக் கொடி கோட்டையில் உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications