சென்னை கிண்டி மருத்துவமனையில் திடீர் மின்தடை.. 3 மணிநேரமாக இருளில் தவித்த நோயாளிகள்
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளது. 3 மணிநேரம் மின்தடை ஏற்பட்டதால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை உள்ளது. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இந்த மருத்துவமனை இயங்கி வருகிறது.

இந்த மருத்துவமனையில் தற்போது அவசர சிகிச்சை பிரிவு உள்பட பிற சிகிச்சை பிரிவுகளில் 400க்கும் அதிகமான நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் தான் மருத்துவமனையில் இன்று மாலை 6.45 மணியளவில் திடீர் மின்தடை ஏற்பட்டது. மருத்துவமனைக்கு மின்சாரம் வழங்கும் மின்மாற்றியிருந்து மருத்துவமனைக்கு வரும் வயர் எரிந்ததால் இந்த மின்தடை ஏற்பட்டது. இந்த எதிர்பாராத மின்தடையால் மருத்துவமனை இருளில் மூழ்கியது. நோயாளிகள் மற்றும் அவர்களுடன் இருந்த உறவினர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.
செல்போன் டார்ச்லைட்லை அவர்கள் பயன்படுத்த தொடங்கினர். இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் உள்ள ஜெனரேட்டரை இயக்க ஊழியர்கள் முயன்றனர். அப்போது ஜெனரேட்டர் வயரும் எரிந்திருந்தது. இதனால் ஜெனரேட்டரும் இயங்கவில்லை. இதன் காரணமாக தொடர்ந்து மருத்துவமனையில் இருள் சூழ்ந்த நிலையில் இருந்தது.
இரவு 10 மணியளவில் தான் மின்சாரம் என்பது வந்தது. மருத்துவமனைக்கு மின் இணைப்பு வழங்கும் பணியில் மருத்துவமனை ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள், பொதுப்பணித்துறையினர் தீவிரமாக செயல்பட்டு மின்துண்டிப்பை சரிசெய்தனர். இந்த 3 மணிநேர மின்தடையால் கிண்டி மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் கடும் அவதியடைந்தனர்.
மின்தடையால் நோயாளிகளின் சிகிச்சையில் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்கான ஏற்பாடுகளை சுகாதாரத்துறை மேற்கொண்டுள்ளது. முன்னதாக 2 நாட்களுக்கு முன்பு இந்த மருத்துவமனையின் டாக்டர் பாலாஜியை கத்தியால் குத்தப்பட்டார். மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவின் சிறப்பு மருத்துவராக பணியாற்றி வந்த பாலாஜியிடம் பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் தகராறு செய்து கத்தியால் குத்தியிருந்தார். விக்னேஷ் கைது செய்யப்பட்டார்.
விக்னேஷின் தாய்க்கு கிண்டி மருத்துவமனையில் சிகிச்சை சிகிச்சை சரியாக வழங்கப்படவில்லை எனவும், இதனால் அவர் தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டதாலும் விக்னேஷ் டாக்டர் பாலாஜியை கத்தியால் குத்தியதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவத்தால் கிண்டி மருத்துவமனையில் தமிழ்நாட்டில் பெரும் பேசும்பொருளான நிலையில் தற்போதைய மின்தடையால் மீண்டும் அந்த மருத்துவமனையின் செயல்பாடு விவாதத்தை கிளப்பி உள்ளது.












Click it and Unblock the Notifications