என்எல்சியில் தொடர் விபத்துகளில் தொழிலாளர்கள் உயிரிழப்பை எப்படி எடுத்துக் கொள்வது? நீதிபதி கேள்வி
சென்னை: என்எல்சியில் தொடர்ந்து தொழிலாளர்கள் உயிரிழந்து வருவதை எப்படி எடுத்துக் கொள்வது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு நெய்வேலி என்எல்சியில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட தீவிபத்தில் 15 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கோதண்டம், முத்துக் கண்ணன் ஆகியோர் தங்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வவக்கு விசாரணையின் போது பாதிக்கப்பட்டோர் தரப்பில் இருந்து மேற்கண்டவர்களின் முன் ஜாமீன் மீது ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. அதில் என்எல்சியில் இது போன்ற விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன. இதனால் தொழிலாளர்கள் இறக்கும் சம்பவம் நடக்கிறது. பலர் காயம் அடைகிறார்கள்.
இறந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு என்எல்சி தரப்பில் இருந்து உரிய இழப்பீடு, கருணை தொகை வழங்கப்படவில்லை என வாதம் செய்யப்பட்டது. இதையடுத்து என்எல்சி நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படுகிறது.
இறந்தவர்களின் குடும்பத்திற்கு வேலையும் வழங்கப்படுகிறது. முத்துக்கண்ணன், கோதண்டம் ஆகியோரின் ஜாமீன் மனுவை தடுப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு, என்எல்சியில் ஓரிரு முறை விபத்து என்றால் ஏதோ தொழிலாளர்கள் கவனக்குறைவால் நடந்து விட்டது என எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால் தொடர்ந்து விபத்து நடந்து உயிரிழப்பு என்றால் அதை எப்படி எடுத்துக் கொள்வது என கேள்வி எழுப்பப்பட்டது. இந்த வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.












Click it and Unblock the Notifications